குறி வைக்கும் ஈரான்..சத்தமின்றி காசாவில் இருந்து படைகளை வாபஸ் பெறும் இஸ்ரேல்.. என்ன தான் நடக்கிறது
டெல் அவிவ்: இஸ்ரேலைச் சுற்றி மீண்டும் போர் மேகங்கள் சூழ்ந்துள்ளன. ஈரான் எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் நடத்தும் என அஞ்சப்படுவதால் காசாவில் இருந்து இஸ்ரேல் மெல்லத் தனது படைகளை வாபஸ் பெற்று வருகிறது.
மத்திய கிழக்குப் பகுதியில் கடந்த சில காலமாகவே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. கடந்த அக். மாதம் முதலில் இஸ்ரேல் நாட்டில் புகுந்த ஹமாஸ் படை சரமாரியாகத் துப்பாக்கிச் சூடு நடத்தித் தாக்குதல் நடத்தியது.

இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் காசா பகுதியில் இஸ்ரேல் போரை ஆரம்பித்தது. இதில் பல ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர். ஆறு மாதங்களுக்கு மேலாக இந்த போர் தொடர்ந்து வருகிறது.
இஸ்ரேல் நடவடிக்கை: இதற்கிடையே மத்திய கிழக்குப் பகுதிகளில் கட்சிகள் மொத்தமாக மாறி வருகிறது. அங்கே காசாவை இஸ்ரேல் முற்றுகையிட்டு இருந்தது அனைவருக்கும் தெரியும். ஆனால், ஈரான் எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் நடத்தலாம் என்பதால் இஸ்ரேல் காசாவின் கான் யூனிஸ் நகரிலிருந்து தங்கள் படைகளை வாபஸ் பெற்று வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இஸ்ரேல் இதற்கு வேறு ஒரு விளக்கத்தைக் கொடுத்துள்ளது..
அதாவது ஹமாஸுக்கு எதிரான போர் ஆறு மாதத்தை எட்டியதால் அங்குத் தனது மிஷனை முடித்துவிட்டே திரும்புவதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. குறிப்பிடத் தகுந்த அளவுக்கு வீரர்கள் வெளியேறினாலும் கூட மீதமுள்ள வீரர்கள் அங்கேயே இருந்து அடுத்த கட்ட நடவடிக்கைகளைக் கவனிப்பார்கள் என்றே இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
"இஸ்ரேல் சர்வ நாசம்.." கொக்கரிக்கும் ஈரான்.. இடையில் பறந்த வார்னிங்! என்ன நடக்கிறது
பிளான் என்ன: இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலன்ட் வேறு ஒரு விளக்கத்தைக் கொடுத்துள்ளார். அதாவது காசாவின் தெற்கே எகிப்தின் எல்லையில் உள்ள ரஃபா நகரத்தின் மீது தாக்குதலுக்குத் தயாராகும் வகையிலேயே ராணுவ வீரர்களைத் திரும்பப் பெறுவதாக அவர் கூறியுள்ளார்.. பல ஆயிரம் ஹமாஸ் படை இருப்பதால் எகிப்து அருகே உள்ள நகரமான ரஃபா மீது தாக்குதல் நடத்தப் போவதாக இஸ்ரேல் பல வாரங்களாகக் கூறி வருவது குறிப்பிடத்தக்கது..
இருப்பினும் ரஃபே நகரில் 10 லட்சத்திற்கும் அதிகமானோர் வசிப்பதால் அங்குத் தாக்குதல் நடத்தும் திட்டம் குறித்து இஸ்ரேல் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அமெரிக்கா உட்பட பல நாடுகள் இஸ்ரேலை வலியுறுத்தி வருகிறது. தாக்குதலை ஆரம்பிக்கும் முன்பு அங்குள்ள மக்களைப் பாதுகாப்பாக வெளியேற்ற முடியுமா என்பதில் அமெரிக்கா சந்தேகம் கொள்கிறது.
பின்னணி: கான் யூனிஸிலிருந்து இஸ்ரேல் வெளியேறி இருக்கும் நிலையில், பாலஸ்தீன மக்களும் அங்கே திரும்பி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. காசா மீது இஸ்ரேல் தாக்குதல் தொடங்கியது முதல் இதுவரை 30 ஆயிரம் பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. காசாவில் இஸ்ரேல் வெற்றிக்கு மிக அருகே உள்ளதாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தச் சூழலில் தான் அடுத்த கட்டமாக இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்த உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ஈரான் கோபம் ஏன்: சிரியாவில் உள்ள ஈரான் தூதரகத்தில் கடந்த வாரம் நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதலில் இரண்டு ஜெனரல்கள் உட்படக் குறைந்தது ஏழு ஈரான் நாட்டில் கொல்லப்பட்டனர். கடந்த சில மாதங்களாகவே இதுபோல சிரியாவில் உள்ள ஈரான் தொடர்புடைய இடங்களைக் குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தினாலும் தூதரக கட்டிடம் போல அதிகாரப்பூர்வ கட்டிடங்களில் தாக்குதல் நடத்துவது இதுவே முதல் முறையாகும்.
இந்தத் தாக்குதலுக்கு இஸ்ரேல் தான் பின்னணியில் இருப்பதாக ஈரான் குற்றஞ்சாட்டி, அதற்குப் பதிலடி கொடுக்க ரெடியாகி வருகிறது. இருப்பினும், இது தொடர்பாக இதுவரை இஸ்ரேல் எந்தவொரு விளக்கமும் தரவில்லை.












Click it and Unblock the Notifications