பற்றி எரியும் காஸா.. ''இது முடிவல்ல ஆரம்பம்.. தாக்குதல் தொடரும்''.. இஸ்ரேல் பிரதமர் வார்னிங்!
ஜெருசலேம்: காஸா மீதான தாக்குதல் தொடரும். இது இன்னும் முடியவில்லை என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
Recommended Video
பொதுமக்களுக்கு பெரிய பாதிப்பு ஏற்படாத வகையில் பயங்கரவாதிகளை நேரடியாக தாக்குகிறோம் என்றும் பெஞ்சமின் நெதன்யாகு கூறினார்.

கடும் சண்டை
இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. அண்மையில் இஸ்லாமியர்கள் மற்றும் யூதர்கள் தங்களது புனித இடமாகக் கருதும் கிழக்கு ஜெருசலேம் பகுதியில் நடந்த மோதல்கள் தற்போது நடந்து வரும் பெரும் மோதல்களுக்கு அச்சாரமாக அமைந்தது. இதனை தொடர்ந்து காசா முனையில் இருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதல் நடத்தியது.

ஏவுகணை தாக்குதல்
இதில் இஸ்ரேலியர்கள் பலர் காயமடைந்தனர். இதற்கு பதிலடியாக பாலஸ்தீனத்தின் காசா முனை மீது இஸ்ரேலிய பாதுகாப்பு படை பதிலடி தாக்குதல் நடத்தியது. இதனை அடுத்து இரு தரப்பும் மாறிமாறி ஏவுகணை தாக்குதலை நடத்தி வருகின்றன. இஸ்ரேல் - பாலஸ்தீன மோதலில் இதுவரை மொத்தம் 168 பேர் உயிரிழந்துள்ளனர்.

பற்றி எரியும் காஸா
காஸா நகரம் எரிந்து கொண்டிருக்கிறது என்று கூறும் அளவுக்கு நிலைமை மோசமாக உள்ளது. நேற்று காஸாவில் இருந்த பிரபல செய்தி நிறுவனங்களான அல் ஜசிரா, மற்றும் அசோசியேட் பிரஸ் ஆகிய நிறுவனங்களின் அலுவலகங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. இந்த நிலையில் காஸா மீதான தாக்குதல் தொடரும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

தாக்குதல் தொடரும்
தொலைக்காட்சி வாயிலாக மக்களுக்கு உரையாற்றிய பெஞ்சமின் நெதன்யாகு கூறியதாவது:- இந்த மோதலுக்கான குற்றத்தைத் தாங்குபவர்கள் நாங்கள் அல்ல. எங்களைத் தாக்கும் நபர்கள்தான் குற்றத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும். காஸா மீதான தாக்குதல் தொடரும். இது இன்னும் முடியவில்லை. ஹமாஸ்கள் பொதுமக்களுக்கு பின்னால் ஒளிந்துகொண்டு பொதுமக்களுக்கு வேண்டுமென்றே தீங்கு இளைகின்றனர். நாங்கள் பொதுமக்களுக்கு பெரிய பாதிப்பு ஏற்படாத வகையில் பயங்கரவாதிகளை நேரடியாக தாக்குகிறோம்.












Click it and Unblock the Notifications