தீப்பிடித்த கிரீஸ் கப்பலில் இருந்து 400 பயணிகள் மீட்பு - 10 பேர் பலி
ஏதென்ஸ்: தீ விபத்தில் சிக்கிய கிரீஸ் கப்பலில் இருந்து 400க்கும் மேற்பட்ட பயணிகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். மீட்புப் பணியின் முடிவில் இந்த விபத்தில் 10 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிரீஸ் நாட்டின் மேற்குப் பகுதியில் உள்ள பட்ராஸ் என்ற ஊரில் இருந்து, கிழக்கு இத்தாலியில் உள்ள அன்கோனா என்ற இடத்திற்கு நார்மன் அட்லாண்டிக் என்ற சிறிய ரக கப்பல் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த கப்பலில் 411 பயணிகளும், 55 ஊழியர்களும் என மொத்தம் 466 பேர் இருந்தனர். இந்த கப்பலில் 222 வாகனங்களும் ஏற்றப்பட்டிருந்தன.
இந்நிலையில் நடுக்கடலில் சென்று கொண்டிருந்த போது திடீரென அக்கப்பலின் அடித்தளத்தில் தீ பிடித்தது. காற்று பலமாக வீசியதால் ஊழியர்களால் தீயை அணைக்க முடியவில்லை. தீ மளமளவென பரவியது.
தீ விபத்து குறித்து கப்பலில் இருந்த பயணிகள் தங்கள் உறவினர்களுக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து தீ பிடித்த கப்பலில் சிக்கிய பயணிகளை மீட்க இத்தாலி மற்றும் அல்பேனிய பாதுகாப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
இதற்கிடையே, கப்பலில் இருந்த பயணிகளை அவசர படகுகள் மூலம் வெளியேற்ற கப்பல் மாலுமி உத்தரவிட்டார். பயணிகள் அணிய, உயிர் காக்கும் ஆடையும் வழங்கப்பட்டது.
மோசமான வானிலை காரணமாக மீட்புப் பணியில் தாமதம் ஏற்பட்டது. ஹெலிகாப்டர் மூலமும் மீட்புப் பணி நடைபெற்றது. 36 மணி நேரங்களுக்கும் மேலாக நடந்த மீட்புப் பணியில் 400க்கும் மேற்பட்ட பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர். இவர்கள் அனைவரும் ஹெலிகாப்டர் மூலமாக பக்கத்தில் நிறுத்தப்பட்டிருந்த சரக்கு கப்பலில் பத்திரமாக இறக்கப்பட்டனர்.
அனைத்து பயணிகளும் வெளியேறி விட்டனரா என்பதை உறுதி செய்து விட்டு தீ விபத்து ஏற்பட்ட கப்பலில் இருந்து கடைசி ஆளாக வெளியேறினார் அக்கப்பலின் கேப்டன். மேலும், இந்த தீ விபத்தில் சிக்கி 10 பேர் உயிரிழந்ததாக மீட்புப் பணியில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.