பத்திரிக்கையாளர் ஜமால் கசோகி கொலை வழக்கு சவுதி அரேபியாவிற்கு மாற்றம்.. எழுந்தது விமர்சனம்
இஸ்தான்புல்: துருக்கியில் பத்திரிகையாளர் ஜமால் கசோகி கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கின் விசாரணையை அந்நாட்டு நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளதோடு, வழக்கு விசாரணையை சவூதி அரேபியாவுக்கு மாற்றம் செய்து இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
சவுதி அரேபியாவைச் சேர்ந்தவர் பத்திரிகையாளர் ஜமால் கசோகி. இவர் அந்நாட்டு அரசையும், பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் ஆகியேரை விமர்சித்து பத்திரிகை மற்றும் இணையதளங்களில் எழுதி வந்தார்.
இதனால் அவருக்கு அச்சுறுத்தல் எழுந்தது. இதையடுத்து அவர் சொந்த நாடான சவூதி அரேபியாவில் இருந்து வெளியேறி அமெரிக்காவில் குடிபெயர்ந்தார்.
பத்திரிக்கையாளர் கொலை
கடந்த 2018 அக்டோபரில் காதலியை திருமணம் செய்ய ஜமால் கசோகி முடிவு செய்தார். இதற்கான ஆவணங்களை பெற ஜமால் கசோகி துருக்கி சென்றார். அங்குள்ள சவூதி அரேபியா தூதரகத்தும் அவர் சென்றார். அதன்பிறகு அவர் மாயமானார். அதன்பிறகு அவர் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. சவுதி அரசு உத்தரவில் அதிகாரிகள் கொலை செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியானது. இதுபெரும் சர்ச்சையைானது. இந்த குற்றச்சாட்டை சவுதி தரப்பில் மறுக்கப்பட்டது.
26 பேர் மீது குற்றச்சாட்டு
ஜமால் கசோகி கொலை தொடர்பாக சவூதி அரேபியாவை சேர்ந்த 26 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டது. இந்த வழக்கு துருக்கி நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை இடைநிறுத்தம் செய்ய வேண்டும். மேலும் வழக்கை சவுதி அரேபியாவுக்கு மாற்ற வேண்டும் என்று குற்றம்சாட்டப்பட்டவர்களின் வழக்கறிஞர்கள் கோரிக்கை வைத்தனர்.
மாற்றம் செய்ய எதிர்ப்பு
இதற்கு மனித உரிமை ஆர்வல அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். சவுதி அரேபியாவுக்கு வழக்கை மாற்றினால் குற்றம்சாட்டப்பட்டவர்கள் தப்பிக்க நேரிடும் என அவர்கள் கூறினர். மேலும் சொந்த நாட்டில் வழக்கு விசாரணை என்பது முறைப்படி நடக்காது. இதனால் வழக்கை எந்த காரணம் கொண்டும் சவுதி அரேபியாவுக்கு மாற்றம் செய்யக்கூடாது என்றனர்.
மாற்றம் செய்து உத்தரவு
இந்நிலையில் வழக்கை சவுதி அரேபியாவுக்கு மாற்றம் செய்து துருக்கி நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவானது துருக்கி நீதித்துறை அமைச்சரின் உதவியுடன் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் துருக்கி நீதிமன்ற விசாரணை முடிவுக்கு வந்துள்ளது. இனி வழக்கு விசாரணை சவூதி அரேபியாவில் நடைபெற உள்ளது.
காரணம் என்ன
துருக்கியில் தற்போது பொருளாதார மந்த நிலை உள்ளது. இதனால் சவுதி அரேபியாவுடன் இணக்கமாக செல்ல துருக்கி முடிவு செய்துள்ளது. இதனால் தான் இந்த வழக்கு சவுதி அரேபியாவுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.