வேக்சின் போட்டால் சம்பளம் தரமாட்டேன்.. அடாவடி செய்த ஜப்பான் நிறுவனம்.. சூப்பர் பாடம் புகட்டிய மக்கள்
டோக்கியோ: ஜப்பானில் கட்டுமான நிறுவனத்தின் தலைவர் ஒருவர், கொரோனா தடுப்பூசி போட்டவர்கள் ஐந்து ஆண்டுகளில் உயிரிழந்து விடுவார்கள் என்று கூறி வருகிறார். மேலும், தடுப்பூசி போட்டவர்கள் அலுவலகத்திற்கு வரக்கூடாது என்ற ஸ்டிரிக்ட் உத்தரவையும் பிறப்பித்துள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
உலகில் எந்தவொரு நாட்டிலும் கொரோனா பரவல் இன்னும் முடியவில்லை, உருமாறிய கொரோனா உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.
தற்போதைய சூழலில் தடுப்பூசி மட்டுமே கொரோனாவுக்கு எதிரான பேராயுதமாக பார்க்கப்படுகிறது. பொதுமக்கள் தடுப்பூசி எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதை உலக நாடுகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

ஜப்பான் நிறுவனம்
இந்நிலையில், ஜப்பானின் முக்கிய கட்டுமான நிறுவனமான தமா ஹோம் நிறுவனத்தின் தலைவர், தடுப்பூசி போட்டுக் கொண்ட ஊழியர்களை கட்டாய விடுப்பில் அனுப்பியுள்ள சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்நிறுவனத்தின் தலைவர் ஷுகன் புன்ஷுன், கொரோனா தடுப்பூசிக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டிருக்கிறார்.

சம்பளம் இல்லை
இதனால் அவர் தடுப்பூசி எடுத்துக் கொள்ளவில்லை என்றால் பரவாயில்லை. தடுப்பூசி எடுத்துக் கொள்பவர்களை தண்டிக்கும் நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். தடுப்பூசி எடுத்துக் கொண்ட ஊழியர்கள் யாரும் அலுவலகத்திற்கு வரக் கூடாது என ஸ்டிரிக்ட் உத்தரவையும் அவர் பிறப்பித்துள்ளார். சுருங்கச் சொன்னால் தடுப்பூசி போட்டால் சம்பளம் கொடுக்க மாட்டேன் என்பதே ஷுகன் புன்ஷுனின் நிலைப்பாடு.

5 ஆண்டுகளில் உயிரிழப்பு
பழைமைவாத கருத்துக்களை கொண்டுள்ள ஷுகன் புன்ஷுன் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் ஐந்து ஆண்டுகளில் உயிரிழந்துவிடுவார்கள், 5 ஜி தொழில்நுட்பம் உயிரை பறிக்கும் போன்ற மெயில்களை தொடர்ந்து ஊழியர்களுக்கு அனுப்பி வந்துள்ளதாகவும் ஜப்பான் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. இந்தச் செய்தி வெளியானவுடன் தமா ஹோம் நிறுவனத்தின் மதிப்பு பங்குச்சந்தையில் 10% வரை சரிந்தது.

யார் இவர்
ஆனால், இந்த செய்திக்கு தமா ஹோம் நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது. தடுப்பூசி போட்டுக் கொள்வது என்பது ஒவ்வொரு நபரின் தனிப்பட்ட விருப்பம் என்றும், அதில் நிறுவனம் தலையிடவில்லை என்றும் விளக்கமளித்துள்ளது. 42 வயதான ஷுகன் புன்ஷுன், கடந்த 2018இல் அந்நிறுவனத்தின் தலைவராக பொறுப்பேற்றார். அதன் பிறகு அநிறுவனத்தின் பங்குகள் இரட்டிப்பானது. ஆனால், இப்போது அவரது நடவடிக்கைகளாலேயே பங்குகள் சரிந்துள்ளது. தடுப்பூசி போட்டவர்களை தண்டித்த நிறுவனத்திற்கு பொதுமக்கள் சரியான பாடத்தை புகட்டியுள்ளனர்.












Click it and Unblock the Notifications