சிங்கப்பூரில் ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் நடத்திய இதய நோய் கருத்தரங்கு
சிங்கப்பூர்: திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் (சிங்கப்பூர் கிளை) கடந்த 17ம் தேதி அன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை இதயநோய் பற்றிய இலவச மருத்துவக் கருத்தரங்கு ஒன்றை சிங்கப்பூர் பீட்டி சாலையில் உள்ள சிண்டா கலையரங்கில் நடத்தியது.
சிங்கப்பூரில் நிகழும் மரணங்களில் சுமார் 32 விழுக்காடு இதயநோயால் ஏற்படுவதாகவும், ஒரு நாளைக்கு சராசரியாக 15 பேர் இதயநோயால் சிங்கப்பூரில் மரணிப்பதாகவும், மாரடைப்பு போன்ற நோய்களை எவ்வாறு தவிர்க்கலாம் என்பது பற்றியும் தெளிவாக விளக்கினார், இக்கருத்தரங்கை நடத்திய பிரபல இதயநோய் மருத்துவர் திரு ஜெயராம் லிங்கமனைக்கர்.
இதயநோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட இக்கருத்தரங்கில் பொதுமக்கள் சுமார் 100 பேர் கலந்து கொண்டு கேள்வி பதில் அங்கத்தில் பல்வேறு பயனுள்ள கேள்விகளைக் கேட்டு பயன்பெற்றனர். சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் தலைவர் திரு நா. ஆண்டியப்பன் சிறப்பு விருந்தினாரக கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார். கருத்தரங்கை நடத்திய மருத்துவர் திரு. ஜெயராமுக்கு சிங்கப்பூர் கூத்தாநல்லூர் சங்கத்தின் முன்னாள் தலைவரும், பிரபல கணக்காய்வாளருமான கே. ஏ. ஹாஜா மெய்தீன் பொன்னாடைப் போர்த்தி நினைவுப் பரிசு வழங்கினார். சிறப்பு விருந்தினருக்கு பாளையம் ஹபீப் முஹம்மது பொன்னாடைப் போர்த்தி கௌரவித்தார்.
சங்கத்தின் தலைவர் ஆடிட்டர், முனைவர் முஹிய்யத்தீன் அப்துல் காதர் இக்கருத்தரங்கை வழி நடத்தினார். சென்னை ரஹ்மத் அறக்கட்டளையின் அறங்காவலர் தொழில் அதிபர் எம். ஏ. தமீம், செம்மொழி இதழின் ஆசிரியர் எம். இலியாஸ் உள்ளிட்டோர் இக்கருத்தரங்கில் கலந்து கொண்டனர். சங்கத்தின் தலைவர் அப்துல் சுபஹான் வழங்கிய நன்றியுரையுடன் இக்கருத்தரங்கு இனிதே நிறைவுற்றது.