பாக்.கில் தற்கொலைப் படை தாக்குல்: நீதிபதி உள்பட 11 பேர் பலி , 25 பேர் காயம்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் நீதிபதி உள்பட 11 பேர் கொல்லப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்லாமாபாத்தில் உள்ள நீதிமன்ற வளாத்திற்கு வெளியே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. போலீஸ் தகவலின் படி, இன்று காலை 9 மணி அளவில் தீவிரவாதிகள் இரண்டு பேர் குண்டுகளை வீசியும், துப்பாக்கியால் சுட்டும் தாக்குதல் நடத்தியதாக கூறப்பட்டுள்ளது. மேலும் இது தற்கொலைப்படை தாக்குதல் என்றும் போலீசார் கூறியுள்ளனர்.
சுமார் 15 நிமிடங்கள் நடந்த இந்த தாக்குதல் சம்பவத்தில் கூடுதல் நீதிமன்ற நீதிபதி ஒருவர் உள்பட 11 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 25 பேர் படுகாயம் அடைந்தனர். கயாம் அடைந்தவர்கள் சிகிச்சைக்காக இஸ்லாமாபாத்தில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
தாக்குதல் நடத்தப்பட்ட இடம் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. தீவிரபாதிகளை தேடும் பணியில் ராணுவத்தினரும், போலீஸாரும் ஈடுபட்டுள்ளனர்.
நீண்ட நாட்களுக்கு பிறகு இஸ்லாமாபாத்தில் நடந்த முதல் தீவிரவாத தாக்குதல் இதுவாகும். பாகிஸ்தான் அமைச்சர் சவுத்ரி நிசார் அலிகான், இஸ்லாமாபாத் பாதுகாப்பான நகரம் என்ற கூறிய சில தினங்களில் இந்த தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தான் அரசுக்கும் தாலிபான்களுக்கும் இடையே நடந்த அமைதி பேச்சுவாத்தையின் பலனாக, அடுத்த ஒரு மாதத்திற்கு தாக்குதல் நடத்த மாட்டோம் என்று தாலிபான்கள் தெரிவித்திருந்தனர். இதனால் இந்த தாக்குதலை யார் நடத்தி இருப்பார்கள் என்ற குழப்பம் நீடிக்கிறது.