சொல்லாமல் கொள்ளாமல் ஆப்கானிஸ்தான் வந்த ஒபாமா.. சந்திக்க மறுத்த கர்ஸாய்!
காபூல்: அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா திடீரென கிளம்பி ஆப்கானிஸ்தானுக்கு வந்தார். ஆனால் அவரைப் பார்க்க ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமீத் கர்ஸாய் மறுத்து விட்டதால் அமெரிக்கத் தரப்பு அதிர்ச்சியாகி விட்டது.
காபூலுக்கு வெளியே உள்ள பக்ரம் விமானப்படைத் தளத்திற்கு வந்து இறங்கினார் ஒபாமா. இது திட்டமிடப்படாத திடீர் பயணமாகும். அவரை சந்திக்க கர்ஸாய் மறுத்து விட்டதால், அமெரிக்கத் தரப்பு சற்று சங்கடப்பட்டு விட்டது.
ஒபாமா ஆப்கானிஸ்தானுக்கு வந்த சமயத்தில் கர்ஸாய், டெல்லியில் இருந்தார். மோடி பதவியேற்பு விழாவுக்காக வந்திருந்த அவருக்கு ஒபாமா வந்திருப்பது குறித்துத் தகவல் தெரிவிக்கப்பட்டதாம். இருப்பினும், தான் உடனடியாக ஆப்கானிஸ்தான் திரும்ப முடியாது, ஒபாமாவையும் பார்க்க இயலாது என்று கூறி விட்டாராம் கர்ஸாய்.
இதுகுறித்து அமெரிக்கத் தரப்பில் கூறுகையில், இது ஆப்கானிஸ்தானில் உள்ள எங்களது படை வீரர்களுக்கு நன்றி கூறுவதற்காக ஒபாமா மேற்கொண்ட பயணம். எனவேதான் ஆப்கானிஸ்தான் அதிபரை அவரது இருப்பிடம் தேடிச் சென்று சந்திக்கத் திட்டமிடப்படவில்லை என்று கூறி சமாளித்தனர்.
மேலும் அவர்கள் கூறுகையில் பக்ரம் விமானப்படைத் தளத்தில் வைத்து அதிபரைச் சந்திக்கலாம் என்று கர்ஸாய்க்குத் தெரிவித்திருந்தோம். ஆனால் அவர் இந்தியா போயிருந்ததால் உடனடியாக திரும்பி வர வாய்ப்பில்லை என்பது எங்களுக்குத் தெரிந்ததுதான் என்றும் அமெரிக்கத் தரப்பு கூறியது.
இருப்பினும் கர்ஸாய் அலுவலகம் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆப்கானிஸ்தான் அதிபர் அமெரிக்க அதிபரை ஆப்கானிஸ்தான் பாரம்பரியப்படி வரவேற்க தயாராகவே இரு்நதார். ஆனால் பக்ரம் விமான தளத்தில் அவரை சந்திக்க அதிபர் கர்ஸாய் விரும்பவில்லை என்று விளக்கப்பட்டுள்ளது.
சமீப காலமாகவே கர்ஸாய்க்கும், ஒபாமாவுக்கும் ஒத்துப் போகவில்லை. இருவரும் எதிரும் புதிருமாக இருந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
வீரர்களுடன் உரையாடிய ஒபாமா
முன்னதாக பக்ரம் விமான தளம் வந்து சேர்ந்த ஒபாமா, அங்கு அமெரிக்க ராணுவ வீரர்களைச் சந்தித்துப் பேசினார். அவர்களிடம் நலம் விசாரித்தார். அவர்களது பணிக்காக நன்றியும் கூறினார். மேலும் ராணுவ மருத்துவமனை ஒன்றையும் நேரில் போய்ப் பார்த்தார். அங்கிருந்த படையினரையும் சந்தித்தார்.
ஒபாமாவுடன் அமெரிக்க பாடகர் பிராட் பெய்ஸ்லியும் வந்திருந்தார். அவர் படை வீரர்களுக்காக பாட்டுக் கச்சேரி ஒன்றையும் நடத்தினார்.