"அடி, உதை, குத்து!" வாயை திறந்தாலே மிதிதான்.. ஷாங்காய் நகரில் கொடூரம்.. மிரண்டு போய் நிற்கும் மக்கள்
பெய்ஜிங்: சீனாவில் கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், சில அதிர்ச்சி தரும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டு இறுதியில் சீனாவில் முதலில் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியது. அதன் பின்னர் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக உலகின் கிட்டதட்ட அனைத்து நாடுகளையும் கொரோனா வைரஸ் வைத்துச் செய்துவிட்டது.
அதேநேரம் இந்த காலகட்டத்தில் சீனாவில் பெரியளவில் வைரஸ் பாதிப்பு ஏற்படவில்லை. ஜீரோ கோவிட் திட்டத்தைப் பின்பற்றிய சீனா, கொரோனா பாதிப்பு பெரியளவில் அதிகரிக்காமல் பார்த்துக் கொண்டது..
சீனா
இருப்பினும், ஓமிக்ரான் கொரோனா நிலைமையை அப்படியே புரட்டிப் போட்டுவிட்டது என்று சொல்லலாம். உலகின் மற்ற நாடுகளில் ஓமிக்ரான் கொரோனா பெரியளவில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. அதேநேரம் சீனாவை இந்த ஓமிக்ரான் கொரோனா படாதபாடு படுத்தி வருகிறது. அங்குப் பல பகுதிகளில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக, சீனா முக்கிய வணிக ஹப்களில் ஒன்றாக அறியப்படும் ஷாங்காய் நகரில் கொரோனா பாதிப்பு காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
ஊரடங்கு
உலகின் பெரும்பாலான நாடுகள் பொதுமக்கள் கொரோனா உடன் வாழ் கற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறி வரும் நிலையில், சீனா மட்டும் இன்னும் ஜூரோ கோவிட் திட்டத்தைக் கடுமையாகப் பின்பற்றி வருகிறது. இதன் காரணமாக ஷாங்காய் உள்ளிட்ட கொரோனா அதிகம் உள்ள நகரங்களில் முழுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனிடையே ஷாங்காய் நகரில் பொதுமக்கள் மிகக் கொடூரமாக நடத்தப்படுவதாகப் புகார்கள் எழுந்து இருந்தன. இதனிடையே இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது,
ஷாங்காய்
அந்த வீடியோக்களில் ஊரடங்கை அமல்படுத்துபவர்களாக அறியப்படும் வெள்ளை நிற கோர்ட் அணிந்த சிலர் மக்களை அடிப்பது தெளிவாகப் பதிவாகி உள்ளது. மேலும், கொரோனா உறுதி செய்யப்படும் மக்களைத் தனியாக அழைத்துச் செல்லும் அவர்கள், கதவுகளையும் கூட வெல்டிங் செய்து, உலோகக் கம்பிகளைக் கொண்டு நுழைவாயில்களை மூடுகின்றன. இந்த முழு ஊரடங்கு காரணமாக ஷாங்காய் நகரில் இருக்கும் பல்லாயிரக்கணக்கான மக்கள் தற்காலிக தனிமைப்படுத்தப்பட்ட முகாம்களில் அவதிப்பட்டு வருகின்றன.
கொடூரம்
சீனாவின் இந்த கொரோனா விதிகள் அங்கு வசிக்கும் மக்களுக்கு பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆண்கள், பெண்கள், பெரியவர்கள் மற்றும் குழந்தைகளும் என அனைவரும் ஒரே இடத்தில் போதிய உணவு உள்ளிட்ட அடிப்படைத் தேவைகள் கூட இல்லாமல் கஷ்டப்பட்டு வருவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. சீன அரசின் இந்த கொடூர நடவடிக்கையை அந்நாட்டு மக்கள் சமூக வலைத்தளங்களில் கண்டித்து கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
புதிய அடிமை முறை
சீனாவின் கொடூர ஊரடங்கு கட்டுப்பாடுகளை விவரிக்கும் வகையில் 'வாய்ஸ் ஆஃப் ஏப்ரல்' என்ற வீடியோ ஒன்றும் வெளியிடப்பட்டது. அதில் ஷாங்காய் மக்கள் கொடூரமாக நடத்தப்படுவதை விளக்கும் வீடியோக்கள் பதிவாகி உள்ளது. சீனா அரசின் இந்த நடவடிக்கையைப் பலரும் சாடி வருகின்றனர். சிலர் சீன அரசின் இந்த நடவடிக்கையை புதியதொரு அடிமை முறை என்றும் சாடியுள்ளனர்.
வாய்ப்பில்லை
சீனாவின் இந்த கொடூர நடவடிக்கைகளில் இருந்து தப்ப, அந்நாட்டு மக்கள் அவர்களாகவே சுயமாகக் குழுக்களை உருவாக்கி உள்ளனர். அதில் சீன அரசின் கொடூர நடவடிக்கைகள் குறித்து கடுமையாகச் சாடி வருகின்றனர். இருப்பினும், இதற்கெல்லாம் அஞ்சி சீன அரசு கட்டுப்பாடுகளை தளர்த்துவதாகத் தெரியவில்லை. மக்களின் நலனைக் காக்கவே இதுபோன்ற கடுமையான முடிவுகள் எடுக்கப்பட்டு வருவதாக அந்நாட்டின் அதிபர் ஜி ஜின்பிங் குறிப்பிட்டுள்ளார்.