குலுங்கியது அமெரிக்கா - 7.3 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம்; மக்கள் பீதி
நியூயார்க்: அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்துக்குட்பட்ட தெற்கு கடற்கரை பகுதியில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.3 புள்ளிகளாக பதிவான இந்த நிலநடுக்கம் சில வினாடிகள் நீடித்தது.
அமெரிக்காவின் பெட்ரோ வளைகுடாவில் இருந்து 50 கி.மீ தொலைவில் உள்ள கிழக்கு தென்கிழக்கு பகுதியில் பூமிக்கு அடியில் 124.8 கி.மீ ஆழத்தில் ஏற்பட்ட இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.3 புள்ளிகளாக பதிவாகியுள்ளது.
இதனால் வீடுகள் வணிக வளாகங்கள் உள்ளிட்ட கட்டிடங்கள் குலுங்கின. பீதியடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் தஞ்சம் புகுந்தனர்.
இந்த நிலநடுக்கம் பெட்ரோ வளைகுடாவில் இருந்து 50 கி.மீ தொலைவில் உள்ள கிழக்கு தென்கிழக்கு பகுதியில் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வுமையம் தெரிவித்து உள்ளது. நில நடுக்கத்தால் உயிர்ச்சேதமோ, பெரிய அளவில் பொருள் சேதமோ ஏற்பட்டதாக தகவல்கள் இல்லை.
இந்த நிலநடுக்கம் பூமியில் அதிக ஆழத்தில் மையம் கொண்டிருந்ததால் ஹவாயை சேர்ந்த பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் சுனாமி எச்சரிக்கை எதையும் விடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே அமெரிக்காவில் பல மாகாணங்களில் உறைபனி கொட்டித் தீர்க்கும் நிலையில் நிலநடுக்கமும் உலுக்கியுள்ள காரணத்தினால் மக்கள் பீதியில் ஆழ்ந்துள்ளனர்.