தாலிபான்கள் கையில் ஆப்கன்.. அதிர்ச்சியா இருக்கு.. பாகிஸ்தானிலிருந்து ஒரு அபய குரல்! நொந்து போன மலாலா
ஆப்கானிஸ்தான் நாட்டை தாலிபான்கள் கைப்பற்றிய நிலையில், அதிர்ச்சி வெளிப்படுத்தியிருக்கிறார் பாகிஸ்தானை சேர்ந்த பெண்கள் செயற்பாட்டாளரும் நோபல் பரிசு பெற்றவருமான மலாலா யூசுப்சாய்.
ஆப்கானிஸ்தான் நாட்டில் படிப்படியாக முன்னேறிய தாலிபான்கள், இறுதியாக தலைநகர் காபூல் நகரை கைப்பற்றி விட்டனர். இதையடுத்து ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு நாட்டை விட்டு வெளியேறி விட்டார்.
தாலிபான்கள் தீவிரமான பிற்போக்குத்தனமான கொள்கைகளை அமல்படுத்த கூடியவர்கள். 1996 முதல் 2001 வரையிலான, கடந்தகால ஆட்சி காலத்தின் போது இதே மாதிரியான கொள்கைகளை அவர்கள் ஆப்கானிஸ்தானில் செயல்படுத்தினர்.

அடக்குமுறைகள் பற்றி மலாலா கவலை
தற்போது அவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ள நிலையில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு கடும் ஒடுக்குமுறைகள் அமல்படுத்தப்படும் என்று அச்சம் சர்வதேச அளவில் எழுந்துள்ளது. இந்த நிலையில்தான் மலாலா வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ஆப்கானிஸ்தான் நாட்டை தாலிபான்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்திருப்பதை பார்க்கும்போது பெரும் அதிர்ச்சி ஏற்படுகிறது. பெண்கள், சிறுபான்மையினர், மனித உரிமை ஆர்வலர்களின் நிலைமை பற்றி நான் மிகவும் கவலைப்படுகிறேன். சர்வதேசம், பிராந்தியம் மற்றும் உள்ளூர் அளவிலான அதிகார மையங்கள் உடனடியாக தலையிட்டு போர் நிறுத்தத்துக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். அகதிகள் மற்றும் நாட்டு குடிமக்களுக்கு மனிதாபிமான அடிப்படையிலான அனைத்து உதவிகளையும் உடனடியாக செய்யவேண்டும் என்று மலாலா யூசுப்சாய் தெரிவித்துள்ளார்.

தாலிபான்கள் விளக்கம்
அதேநேரம் தாலிபான் அமைப்பு பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு அவர்களின் உரிமையை வழங்கும் என்று அறிவித்துள்ளது. தாலிபான் அமைப்பின் செய்தி தொடர்பாளர் அளித்துள்ள பேட்டியில், பெண்கள் வீட்டை விட்டு வெளியேறுவதற்கு அனுமதிக்கப்படுவார்கள். கல்வி மற்றும் வேலை போன்றவற்றுக்காக அவர்கள் வெளியே செல்லலாம். அதே நேரம் அவர்கள் முழுவதுமாக உடலை மூடக்கூடிய பர்தா ஆடைகளை அணிந்து இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

பள்ளிக்கு சென்றதற்காக துப்பாக்கி சூடு
மலாலா யூசுப்சாய் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர். 1997ம் ஆண்டு பாகிஸ்தானின் வட மேற்கு பகுதியில் உள்ள மின்கோரா மாவட்டத்தில் பிறந்தவர். ஸ்வாட் மாவட்டத்தில், தனது 15வது வயதில், அவர் பள்ளிக்கு சென்று திரும்பியபோது, பாகிஸ்தானிய தாலிபான்கள் மலாலா மீது சரமாரி துப்பாக்கிச் சூடு நடத்தினர். ஸ்வாட் பள்ளத்தாக்கில் பள்ளிப் பேருந்து சென்று கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்தது. இதில் மலாலா தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உயிருக்குப் போராடிய நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் உயிர் பிழைத்தார். ஆபத்தான நிலையில் இருந்த அவருக்கு பாகிஸ்தான் ராணுவ ஆஸ்பத்திரியில் முதலில் சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் லண்டனுக்கு அழைத்து செல்லப்பட்டு அங்கு சிகிச்சை அளித்தனர். அவரது மண்டை ஓட்டின் ஒரு பகுதி அகற்றப்பட்டு ஆபரேசன் நடந்தது. இதன் பிறகு மலாலா முழுமையாக தேறினார். மலாலா யூசுப்சாய் பள்ளிக்கு சென்றதால்தான் இந்த கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டது.

நோபல் பரிசு பெற்ற மலாலா
இந்த தாக்குதலுக்கு பிறகு மலாலா உலக அளவில் புகழ் பெற்றார். இந்த நிலையில்தான் 2014ம் ஆண்டு, அமைதிக்கான நோபல் பரிசு மலாலா யூசுப்சாய் மற்றும் இந்தியாவைச் சேர்ந்த குழந்தைகளின் உரிமைகளுக்காக பாடுபடும் கைலாஷ் சத்யார்த்தி ஆகியோருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது.

மக்கள் வெளியேற்றம்
தாலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்ற தொடங்கியதும் அந்த நாட்டைச் சேர்ந்த பல முற்போக்கு எண்ணம் கொண்ட மக்கள் அங்கிருந்து வெளியேற தொடங்கியிருக்கிறார்கள். பெண்களுக்கு எதிராக கடுமையான உத்தரவுகள் பிறப்பிக்கப்படும், ஆண்களுக்கும் கடுமையான கெடுபிடிகள் கொண்டுவரப்படும் என்ற அச்சத்தின் காரணமாக அவர்கள் அகதிகளாக நாட்டை விட்டு வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள்.

தடுப்பூசி செலுத்த தடை
கொரோனா தடுப்பூசி செலுத்தக்கூடாது, பெண்கள் தனியாக வீட்டை விட்டு வெளியே போகக் கூடாது என்பது போன்ற பல்வேறு உத்தரவுகளை தாலிபான்கள் ஏற்கனவே, சில பிராந்தியங்களில் விதித்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கிழக்கு ஆப்கானிஸ்தானின் பாக்டியாவில் தாலிபான்கள் கோவிட் தடுப்பூசிக்கு தடை விதித்துள்ளதாக ஆப்கானிஸ்தானை சேர்ந்த வானொலி மற்றும் தொலைக்காட்சி நிர்வாகம் ஷம்ஷாத் நியூஸ் தெரிவித்துள்ளது. மத கோட்பாடுக்கு எதிரானது என்று கூறி, பாக்டியா பிராந்திய மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசிகள் தடை செய்யப்பட்டுள்ளது என்று அந்த செய்தி, மாநில பொது சுகாதார இயக்குனர் வாலாயத் கான் அகமத்ஸாயை மேற்கோள் காட்டி தெரிவித்துள்ளது.

மாறிட்டோம்
இருப்பினும் நாங்கள் முன்பு போல் இல்லை, இப்போது மாறி விட்டோம், ஓரளவு தன் கட்டுப்பாடு போடுவோம் என்பது போன்ற ரீதியில் தாலிபான்கள் தரப்பு பேசி வருகிறது. இதை நம்ப முடியுமா, தொடர்ந்து இதே நிலைப்பாட்டில் அவர்கள் இருப்பார்களா, என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டியுள்ளது. தாலிபான்களுக்கு பாகிஸ்தான் ஆதரவு தெரிவிப்பதாக கூறப்படும் நிலையில், மலாலா யூசுப்சாய் தாலிபான்களின்களுக்கு எதிராக பேசியிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications