கோலாலம்பூர்: மலேசிய விமானத்தை சுட்டு வீழ்த்தியது யார்? ரஷ்யா- உக்ரைன் பரஸ்பரம் குற்றச்சாட்டு
கோலாலம்பூர்: மலேசிய ஏர்லைன்சிற்கு சொந்தமான எம்.ஹச்.17 பயணிகள் விமானம், ரஷ்ய எல்லையில் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது உறுதியாகி உள்ள நிலையில் அதனை சுட்டது யார் என்ற குழப்பம் எழுந்துள்ளது. அதேசமயம் இந்த தாக்குதல் சம்பவத்திற்கு உக்ரைனும் ரஷ்யாவும் பரஸ்பர குற்றம்சாட்டி வருகின்றன.
கிழக்கு உக்ரைனில் உள்ள ரஷ்யா எல்லையில் மலேசிய விமானம் சுட்டு விழ்த்திய சம்பவத்திற்கு ரஷ்யா ஆதரவு கிளர்ச்சியாளர்களே காரணம் என உக்ரைன் ராணுவமும் உக்ரைன் ஆதரவுப் படையினரும் குற்றம்சாட்டியுள்ளனர்.
ஆனால் அதற்கு கிளர்ச்சியாளர்களும், ரஷ்ய ராணுவமும் மறுப்பு தெரிவித்துள்ளன. உக்ரைன்தான் விமானம் சுடப்பட்டதற்குக் காரணம் என்று ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது.
பக் ஏவுகணை
உக்ரைன் தீவிரவாதிகளால் (கிளர்ச்சியாளர்களால்) 'பக்' ஏவுகணை மூலம் மலேசியா தாக்கப்பட்டதாக உக்ரைன் உள்துறை அமைச்சரின் ஆலோசகர் ஆன்டன் ஹெரா சென்கோ தெரிவித்துள்ளார்.
முழுவிசாரணை நடத்த முடிவு
இதற்கு ரஷ்யா உளவு துறை அதிகாரிகள் உதவியதாக கூறியுள்ள உக்ரைன் அரசு இது குறித்து முழு விசாரணை நடத்தப்படும் என தெரிவித்துள்ளது.
விமானத்தை சுட்டு விழ்த்திய ஒலிநாடாவையும் உக்ரைன் வெளியிட்டுள்ளது.
ரஷ்யா குற்றச்சாட்டு
இதேபோல ரஷ்யாவும் ரஷ்ய ஆதரவுப் படையினரும் உக்ரைன் ராணுவம், உக்ரைன் ஆதரவுப் படையினர் மீது குற்றம் சாட்டுகின்றனர்.
உக்ரைன் ராணுவத்திடம் வசதி
மேலும் அதிக உயரத்தில் பறக்கும் விமானத்தை சுட்டு வீழ்த்தக்கூடிய ஆயுதம் உக்ரைன் ராணுவத்திடம் உள்ளது. எனவே அவர்கள் தான் அந்த விமானத்தை சுட்டு வீழ்த்தியுள்ளனர் என கூறியுள்ளார். ஆனால் அதை உக்ரைன் ராணுவம் மறுத்துள்ளது.
|
ரஷியாவிற்கு சொந்தமானது
பக் ஏவுகணை ரஷியாவுக்கு சொந்தமானது. 55 கிலோ எடை கொண்ட அந்த ஏவுகணை 28 கி.மீட்டர் தூரம் பாய்ந்து சென்று இலக்கை தாக்க கூடியது. அந்த ஏவுகணையை ரஷிய அதிபர் புதின் தீவிரவாதிகளுக்கு (கிளர்ச்சியாளர்களுக்கு) வழங்கியுள்ளார் என உக்ரைன் தெரிவித்துள்ளது.
ரஷியாவின் ஏவுகணைகள்
கிழக்கு உக்ரைனில் உக்ரைனின் பல போர் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களை கிளர்ச்சியாளர்கள் சுட்டு விழ்த்தியுள்ளனர். கடந்த 14ஆம் தேதி உக்ரைனின் ஏ.என்-26 ரக விமானமும், 16ஆம் மற்றொரு போர் விமானமும் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது. இவை அனைத்தும் ரஷியா வழங்கிய ஏவுகணை மூலமே சுடப்பட்டதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது.
கிளர்ச்சியாளர்கள் மறுப்பு
இந்தக் குற்றச்சாட்டினை கிளர்ச்சியாளர்கள் மறுத்துள்ளனர். விபத்துக்குள்ளான 10 ஆயிரம் அடி உயரத்தில் அதாவது 10 கி.மீட்டர் உயரத்தில் பறந்த போது மலேசிய விமானம் சுடப்பட்டுள்ளது.ஆனால் எங்களிடம் அவ்வளவு உயரத்தில் பறக்கும் விமானத்தை தாக்கி அளிக்கும் ஏவுகணைகள் இல்லை. எனவே அந்த விமானத்தை உக்ரைன் ராணுவம் சுட்டு வீழ்த்தியுள்ளது என கிளர்ச்சியாளர்களின் தலைவர் அலெக்சாண்டர் போரோடாய் தெரிவித்துள்ளார்.
போர் பகுதியாக அறிவிப்பு
கிழக்கு உக்ரைனில் உள் நாட்டு போர் நடப்பதால் அது போர் பகுதியாக அறிவிக்கப் பட்டுள்ளது. அங்கு வெளி நாட்டு விமானங்கள் பறக்க வேண்டாம் என அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் எச்சரிக்கை விடுத்து இருந்தன.ஆனால் சுட்டு வீழ்த்தப் பட்ட மலேசிய விமானத்தின் விமானி விமானத்தின் பயண பாதையை மாற்றி விட்டதாக கூறப்படுகிறது. எனவே, அந்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது.
விமானத்தை சுட்டது யார்
ராணுவத்திற்கு சொந்தமானது என நினைத்து கிளர்ச்சியாளர்கள் தான் விமானத்தை சுட்டு வீழ்த்தினர் என உக்ரைன் ராணுவத்தினரும், ராணுவத்தினர் தான் சுட்டு வீழ்த்தினர் என கிளர்ச்சியாளர்களும் மாறி மாறி குற்றம்சாட்டி உள்ளது குழப்பத்தை அதிகரிக்க செய்துள்ளது. அதேசமயம், ரஷ்யாவும், உக்ரைனும் பரஸ்பரம் குற்றச்சாட்டி வருகின்றனர். இதனால் விமானத்தை சுட்டது யார், 298 உயிர்கள் பலியாக காரணமானவர்கள் யார் என்ற குழப்பம் அதிகரித்துள்ளது.