தான்சானியாவில் கண்டெடுக்கப்பட்டது எம்.எச்.370 விமானத்தின் பாகம் தான் - மலேசியா உறுதி
கோலாலம்பூர்: தான்சானியாவில் கண்டெடுக்கப்பட்டது 2014-ம் ஆண்டு மாயமான எம்.எச்.370 விமானத்தின் பாகம் தான் என்பதை மலேசியா அரசு உறுதி செய்துள்ளது.
மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீனாவின் பீஜிங் நகருக்கு புறப்பட்டு சென்ற மலேசியன் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தை சேர்ந்த எம்.எச்.370 விமானம் கடந்த 2014ம் ஆண்டு மார்ச் 8-ந்தேதி நடுவானில் திடீரென மாயமானது. இந்த விமானத்தில் இருந்த 239 பயணிகளும் உயிரிழந்ததாக மலேசிய அரசு அறிவித்தது.
விமானத்தை தேடும் பணி இந்திய பெருங்கடல் பகுதியில் தொடர்ந்து நடைபெற்று வந்தது. எனினும் விமான தேடுதல் வேட்டையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. தொடர்ந்து மர்மம் நீடித்து வருகிறது.
இந்திய பெருங்கடல் பகுதியில் உள்ள பல்வேறு கடற்கரையில் கண்டுபிடிக்கப்பட்ட சிதைவு பாகங்கள் ஆய்வகங்களுக்கு கொண்டு செல்லப்பட்டது. மாயமான விமானத்தின் பெரிய அளவிலான உதிரி பாகம் கடந்த ஜூன் மாதம் கிழக்கு ஆப்பிரிக்காவின் தான்சினியா நாட்டில் உள்ள பெம்பா தீவில் கண்டெடுக்கப்பட்டது.
இந்நிலையில், தான்சானியாவில் கண்டெடுக்கப்பட்டது எம்.எச்.370 விமானத்தின் பாகம் தான் என்பதை மலேசியா உறுதி செய்துள்ளது. முன்னதாக, ஆய்விற்காக ஆஸ்திரேலியாவிற்கு இந்த உதிரி பாகம் கொண்டு செல்லப்பட்டது. ஆய்வு முடிவில், கண்டெடுக்கப்பட்டது எம்.எச்.370 விமானத்தின் பாகம் தான் என்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மலேசிய போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.