கொளுத்தும் வெயில், அனல்காற்று: மலேசியாவில் பள்ளிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை
கோலாலம்பூர்: மலேசியாவில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் கேதா மற்றும் பெர்லிஸ் மாநிலங்களில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் செவ்வாய்க்கிழமை மற்றும் புதன்கிழமை விடுமுறை அளிக்க கல்வி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
உலகின் பல்வேறு பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. மலேசியாவும் அதற்கு விதிவிலக்கு அல்ல. மலேசியாவில் வெயில் மண்டையை பிளக்கிறது. மே மாத இறுதி அல்லது ஜூன் மாத துவக்கம் வரை இப்படித் தான் வெயில் சுட்டெரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மலேசியாவின் கேதா மற்றும் பெர்லிஸ் மாநிலங்களில் அனல்காற்று தாங்க முடியாத அளவுக்கு உள்ளது. இதையடுத்து செவ்வாய் மற்றும் புதன்கிழமை கேதா மற்றும் பெர்லிஸ் மாநிலங்களில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்க கல்வி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
வெயிலின் தாக்கம் 39 டிகிரி செல்சியஸுக்கு மேல் இருந்தால் புதன்கிழமைக்கு பிறகும் விடுமுறை அளிக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். மலேசியாக்காரர்கள் வெயிலை தாங்க முடியாமல் இருக்க ஐரோப்பாவை சேர்ந்த சுற்றுலாப் பயணிகளோ சூரிய வெப்பத்தை ரசித்து மகிழ்கிறார்கள்.
மலேசியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பெல்ஜியத்தை சேர்ந்த டோலியன் லெஜூன் கூறுகையில்,
இந்த அளவுக்கு வெயில் எங்கள் ஊரில் இல்லை. அதனால் வெயிலை ரசித்துக் கொண்டிருக்கிறேன். அருமையாக உள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications