மாலி நாட்டில் முதல் எபோலா பலி: 2 வயது சிறுமி மரணம்!
பமாகோ: மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் எபோலா நோய் தாக்குதலில் 2 வயது சிறுமி மரணமடைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மேற்கு ஆப்பிரிக்க நாடுகளான கினியா, லைபீரியா, சியரா லியோன் ஆகிய நாடுகளில் ‘எபோலா' வைரஸ் நோய் வேகமாகப் பரவி வருகிறது. இதுவரை 4,800 பேர் எபோலா நோயால் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
மேலும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. எனவே இந்தக் கொடிய நோய் பரவாமல் தடுக்க சர்வதேச நாடுகள் சார்பில் பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்நிலையில் நோய்த் தாக்கம் அதிகம் உள்ள கினியா நாட்டின் அருகேயுள்ள மாலி நாட்டிலும் தற்போது எபோலா நோய் பரவியுள்ளது. இங்கு 2 வயது சிறுமி, எபோலா வைரஸ் தாக்கி பலியானாள். இந்தச் சிறுமி கினியாவில் இருந்து மாலி நாட்டுக்கு சமீபத்தில் தான் வந்தாள்.
இறந்தச் சிறுமியின் தாய் கினியாவில் சில வாரங்களுக்கு முன்பு இறந்து விட்டார். அதனால் இந்தச் சிறுமி மாலியில் உள்ள உறவினர் வீட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டாள். ஆனால் எதிர்பாராதவிதமாக எபோலா தாக்கத்திற்கு ஆளாகி பரிதாபமாக இறந்து விட்டாள்.
அண்டை நாடான கினியாவுக்கும், மாலிக்கும் இடையே தினமும் பஸ் மற்றும் டாக்சி போக்குவரத்து உள்ளது. அதனால், இங்கு எபோலா நோய் பரவுவது தீவிரமாகியுள்ளது.
தற்போது இங்கு நடத்தப்பட்ட சோதனையில் 43 பேரை எபோலா நோய் தாக்கியுள்ளது. இவர்களில் 10 பேர் சுகாதார ஊழியர்கள். இவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் எபோலா தாக்கிய நாடுகள் பட்டியலில் மாலி 6-வது நாடாகும் என்று உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.