காதலியுடன் ரொமாண்டிக் சுற்றுலா போன மெகுல் சோக்சி.. அடித்து துவைத்து தூக்கி சென்ற டொமினிகா!
ஆன்டிகுவா: காதலியுடன் ரொமாண்டிக் சுறறுலா போன மெகுல் சோக்சியை டொமினிகா நாட்டு போலீசார் அடித்து உதைத்து தங்கள் நாட்டிற்கு தூக்கி சென்று சிறையில் தள்ளியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த தகவலை ஆன்டிகுவா மற்றும் பர்புடா நாட்டு பிரதமர் காஸ்டன் பிரௌன் தெரிவித்துள்ளார்
பிரபல வைர வியாபாரி நீரவ் மோடியும், அவரது உறவினர் மெகுல் சோக்சியும், மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13500 கோடிக்கு மேல் மோசடியாக கடன் பெற்று ஏமாற்றி உள்ளனர். இந்த உண்மை வங்கிக்கு தெரிய தொடங்கிய உடன் இருவரும் நாட்டை விட்டு தப்பி ஓடிவிட்டனர். நீரவ் மோடி இங்கிலாந்தின் லண்டனுக்கு தப்பி ஓடிவிட்டார்.
தஞ்சை மருத்துவமனைக்கு ரூ.1 கோடியில் ஆக்சிஜன் நிலையம்.. நன்றி தெரிவித்த அமைச்சர் அன்பில் மகேஷ்!
அவரது நண்பரும் பிரபல வைர வியாபாரியுமான மெகுல் சோக்சி, ஆன்டிகுவா நாட்டிற்கு தப்பியோடிவிட்டார். ஆனால் சோக்சி தப்பிய ஓடியபின்னர் உண்மை வெளிச்சத்திற்கு வந்தது. அவர்கள் கடன் மோசடி அம்பலம் ஆனது. இதையடுத்து நீரவ் மோடியும், அவரது உறவினர் மெகுல் சோக்சி ஆகியோர் மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியது. இவர்கள் இருவர் மீதும் சி.பி.ஐ. 2 குற்றப்பத்திரிகைகளையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.
என்ன சிக்கல்
நீரவ் மோடியின் நண்பரும். கீதாஞ்சலி குழும உரிமையாளரான மெகுல் சோக்சி, ஆன்டிகுவாவில் தஞ்சம் அடைந்தது மத்திய அரசுக்கு தாமதமாகவே தெரியவந்தது. அவரை இந்தியா கொண்டு வரும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. குற்றவாளிகளை நாடு கடத்தும் ஒப்பந்தம் ஆன்டிகுவாவுடன் ஏற்படுத்தப்படவில்லை. இதனால் சோக்சியை இந்தியா கொண்டு வருவதில் சிக்கல் நிலவுகிறது.
ஜாலி துறைமுகம்
இந்த நிலையில், வங்கி கடன் மோசடியில் ஈடுபட்டு, வெளிநாட்டில் தலைமறைவான மெகுல் சோக்சியை காணவில்லை என அவரது வழக்கறிஞர் விஜய் அகர்வால் அண்மையில் கூறினார். இது தொடர்பாக ஆன்டிகுவா போலீசார் நடத்திய விசாரணையில், சோக்சியை ஆன்டிகுவாவில் இருந்து டொமினிகா நாட்டுக்கு இழுத்து செல்லப்பட்டது தெரியவந்தத. ஆன்டிகுவாவின் ஜாலி துறைமுகத்தில் இருந்து அவரை டொமினிகா போலீசார் கடத்தி சென்றதாக கூறப்படுகிறது.
வெளியான புகைப்படம்
விசாரணைக்கு பின்னர் மெகுல் சோக்சி டொமினிகா நாட்டில் போலீஸ் காவலில் சிறையில் உள்ள புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. அதில் அவர், ஆள் அடையாளம் தெரியாத வகையில் மெலிந்த தேகத்துடன் உள்ளார். மற்றொரு புகைப்படத்தில் சோக்சியின் வலது மற்றும் இடது கைகளில் காயம் ஏற்பட்டதற்கான தழும்புகளும் உள்ளன.
அடித்து இழுத்துச்சென்ற போலீஸ்
இதனிடையே டொமினிகாவை ஒட்டிய Caribbean கடற்கரைக்கு காதலியுடன் ரொமாண்டிக் சுறறுலா போன மெகுல் சோக்சியை சட்ட விரோதமாக நாட்டிற்குள் நுழைந்ததாக டொமினிகா நாட்டு போலீசார் அடித்து உதைத்து தங்கள் நாட்டிற்கு தூக்கி சென்று சிறையில் தள்ளியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த தகவலை ஆன்டிகுவா மற்றும் பர்புடா நாட்டு பிரதமர் காஸ்டன் பிரௌன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்
ஒப்படையுங்கள்
இந்த நிலையில், மெகுல் சோக்சி மிக பெரிய குற்றம் செய்துள்ளார் எனவும் இந்திய குடிமகனான அவரை திரும்ப ஒப்படைக்கும்படியும் டொமினிகா அரசிடம் இந்தியா வலியுறுத்தி உள்ளது. டொமினிக் அரசை இந்திய தூதரகம் வழியே தொடர்பு கொண்ட மத்திய அரசு, இன்டெர்போல் ரெட் கார்னர் நோட்டீஸ் அளிக்கப்பட்ட மெகுல் சோக்சி, இந்திய குடிமகனாக எங்களுடைய நாட்டில் இருந்து தப்பி சென்ற நபராகவே நடத்தப்பட வேண்டும். அவரை நாடு கடத்தி இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும். நாட்டு மக்களின் கோடிக்கணக்கான பணம் கொள்ளையடிக்கப்பட்டதில் அவருடைய உண்மையான பங்கு பற்றி இந்திய சட்டத்திற்கு பதிலளிக்க வேண்டும் என்று கூறியுள்ளது.