மனநலம் பாதிக்கப்பட்ட மாயமான மலேசிய விமானத்தின் கேப்டன் தற்கொலை செய்திருப்பார்: நிபுணர் தகவல்
லண்டன்: மாயமான மலேசிய விமானத்தின் விமானி மனநலம் பாதிக்கப்பட்டிருந்தாதல் அவர் தற்கொலை செய்திருக்கக்கூடும் என்று விமான விபத்து விசாரணை நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
கடந்த மார்ச் மாதம் 8ம் தேதி மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பெய்ஜிங்கிற்கு கிளம்பிய மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் எம்.ஹெச். 370 மாயமானது. ஆனால் விமானம் தெற்கு இந்திய பெருங்கடலில் விழுந்து மூழ்கிவிட்டதாகவும், அதில் இருந்த 239 பேரும் பலியாகிவிட்டதாகவும் மலேசிய அரசு அறிவித்தது.
தெற்கு இந்திய பெருங்கடலில் விமானத்தை தேடி வரும் போதிலும் இதுவரை ஒரு பாகம் கூட கிடைக்கவில்லை.
கேப்டன்
விமானம் மாயமானபோது விமானி ஜாஹரி அகமது ஷா தான் குடும்ப பிரச்சனையால் தற்கொலை செய்ய விமானத்தை கடலில் விட்டிருக்கலாம் என்று கூறப்பட்டது.
தற்கொலை
விமான விபத்து விசாரணை நிபுணரான நியூசிலாந்தை சேர்ந்த இவான் வில்சன் கூறுகையில், மனநலம் பாதிக்கப்பட்டிருந்த ஜாஹரி தற்கொலை செய்திருக்கக்கூடும் என்றார்.
இங்கிலாந்து
குட்நைட் மலேசியன் 370: தி ட்ரூத் பிஹைன்ட் தி லாஸ் ஆப் ஃபிளைட் 370 என்ற புத்தகத்தை எழுதிய இவான் வில்சன் அதை கடந்த ஜூலை மாதம் வெளியிட்டார். இந்நிலையில் அவர் இங்கிலாந்து வந்து விமான போக்குவரத்து நிபுணர்களை சந்தித்து விமானிகளின் மனநலம் குறித்து ஆலோசனை நடத்தினார்.
வில்சன்
கடந்த 30 ஆண்டுகளில் நடந்த விமான விபத்துகளில் 5ல் விமானி கொலை அல்லது தற்கொலை செய்தது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது. மலேசிய விமானத்தின் விமானி தற்கொலை செய்திருக்க வேண்டும் என்று விமானியும், நிபுணருமான வில்சன் தெரிவித்தார். வில்சன் தான் கிவி ஏர்லைன்ஸ் நிறுவனத்தை துவங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.