மெக்சிகோவில் 4 பிளாஸ்டிக் பைகளில் 10 பிணங்கள், 11 தலைகள்- மாயமான மாணவர்களா என சந்தேகம்
மெக்சிகோ சிட்டி: மெக்சிகோவில் புதை குழியில் இருந்து 10 சடலங்களுடன், 11 தலைகள் அடங்கிய பிளாஸ்டிக் பை ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது பரபரப்பை உண்டாக்கியுள்ளது.
மெக்சிகோவில் கடந்த செப்டம்பர் 26ஆம் தேதியன்று குய ரெட்டா மாகாண தலைநகர் சில்பான் சிங்கோவில் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியப் பயிற்சி நிறுவனத்தின் 43 மாணவர்கள் காணாமல் போயினர். அம்மாணவர்கள் காவல்துறையின் ஆதரவு பெற்ற போதை மருந்து கும்பல் ஒன்றால் படுகொலை செய்யப்பட்டது கண்டு பிடிக்கப்பட்டது. இதில் ஒரு மாணவனின் உடல் மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ளது. மற்றவர்களின் உடல்கள் இதுவரை முழுமையாக கிடைக்கவில்லை.
இது தொடர்பாக மாயமான மாணவர்களின் பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தொடர்ந்து மாயமான மாணவர்களின் சடலங்களை மீட்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், நேற்று ஒரு புதை குழியில் இருந்து 10 உடல்கள் மற்றும் 11 மனித தலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவை 4 கருப்பு நிற பிளாஸ்டிக் பைகளில் கட்டப்பட்டிருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
தற்போது கண்டெடுக்கப்பட்டுள்ளவர்களின் உடல்கள் காணாமல் போன மாணவர்களின் உடல்களாக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். மீட்கப்பட்டுள்ள சடலங்களில் கைகள் கட்டப்பட்டு, சித்ரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டதற்கான தடயங்கள் இருப்பதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
மெக்சிகோ நாடு போதைப் பொருள் கும்பல்களிடம் சிக்கித் தவித்து வருகிறது. இந்த நாட்டில் எங்கு பார்த்தாலும் போதைக் கடத்தல்காரர்கள்தான். போலீஸாரில் பலர் இவர்களுக்கு உடந்தையாக இருந்து வருகின்றனர். இவர்களை ஒழித்துக் கட்ட அமெரிக்காவும் கூட உதவுவதாக தெரிவித்துள்ளது. ஆனாலும் இவர்களை இதுவரை மெக்சிகோ அரசால் முழுமையாக ஒழிக்க முடியாத நிலையே காணப்படுகிறது.