மலேசிய விமானத்தை ரஷ்யா சுட்டு வீழ்த்தியிருக்குமோ?: புதிய கோணத்தில் நெதர்லாந்து விசாரணை
ஆம்ஸ்டர்டாம்: உக்ரைனில் மலேசிய விமானத்தை பக் ஏவுகணை வீசித் தாக்கியது ரஷ்ய ஆதரவுப்படை தான் என்கிற பெல்லிங்கேட் பத்திரிக்கையாளர் அமைப்பின் தகவலின் அடிப்படையில் விசாரணை நடத்த நெதர்லாந்து தீர்மானித்துள்ளது.
கடந்த 2014ம் ஆண்டு நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் இருந்து 283 பயணிகள், 15 சிப்பந்திகள் என 298 பேருடன் மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு கிளம்பிய மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் எம்.ஹெச். 17 கிழக்கு உக்ரைனில் பக் ஏவுகணை வீசித் தாக்கப்பட்டது.
இதில் விமானத்தில் இருந்த அனைவரும் உடல் சிதறி பலியாகினர். விமானத்தை உக்ரைனில் உள்ள ரஷ்ய ஆதரவுப்படையினர் சுட்டதாக உக்ரைனும், உக்ரைன் ராணுவம் சுட்டதாக ரஷ்யாவும் தெரிவித்து வருகிறது. இதற்கிடையே ரஷ்யா தான் விமானத்தை சுட்டு வீழ்த்தியிருக்கும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
விமான விபத்து குறித்து நெதர்லாந்து விசாரணை நடத்தி வருகிறது. 2014ம் ஆண்டில் பெல்லிங்கேட் என்ற இங்கிலாந்தைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் குழு முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டது. அதாவது, விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட ஜூலை 17ம் தேதி உக்ரைனில் உள்ள ரஷ்ய ஆதரவுப்படையினர் கட்டுப்பாட்டில் இருக்கும் இடத்தில் பக் ஏவுகணை லான்ச்சர் இருந்தது என்றும், அது ரஷ்யாவில் இருந்து ராணுவம் அனுப்பி வைத்தது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
பக் ஏவுகணை லான்ச்சரை அனுப்பி வைத்த ராணுவ குழுவுக்கு ஏவுகணை வீசி விமானத்தை யார் தாக்கியது என்ற விபரம் தெரியும் என்கிறது பெல்லிங்கேட்.
சமூக வலைதளங்கள் மற்றும் பிற வழியாக ஆதாரங்களை திரட்டுவதில் பெல்லிங்கேட் கெட்டிக்கார அமைப்பு என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பெல்லிங்கேட் பத்திரிக்கையாளர்கள் தெரிவித்ததின் அடிப்படையில் விசாரணை நடத்தப்படும் என்று நெதர்லாந்து விசாரணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.