மாயமான விமானத்தை தேடுவதில் மலேசியா மெத்தனமாக இருந்தது- விசாரணை அறிக்கை
கோலாலம்பூர்: மலேசிய விமானம் மாயமான 17 நிமிடங்கள் கழித்துதான் விமான டிராபிக் கட்டுப்பாட்டாளருக்கு அதுகுறித்து தெரியவந்ததாகவும், 4 மணி நேரம் தாமதத்துக்கு பிறகுதான் விமானத்தை தேடும் பணிகள் தொடங்கியதாகவும் மலேசிய அரசு வெளியிட்டுள்ள ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மலேசிய விமானம் மாயமான இரு மாதங்களுக்கு பிறகு முதன்முறையாக மலேசிய அரசு நேற்று இரவு தனது முதல்கட்ட ஆய்வு அறிக்கையை வெளியிட்டது. அதிலுள்ள முக்கிய அம்சங்கள்:
17 நிமிடங்கள் கழித்துதான்...
கோலாலம்பூரில் இருந்து பீஜிங் நோக்கி, மார்ச் 8ம்தேதி அதிகாலை 12.41 மணிக்கு விமானம் கிளம்பியது. விமானம் கிளம்பிய சிறிது நேரத்தில் மலேசிய ரேடார்களின் கண்காணிப்பில் இருந்து விமானம் தவறிவிட்டது. சுமார் 17 நிமிடங்கள் கழித்துதான் கோலாலம்பூர் விமான டிராபிக் கட்டுப்பாட்டாளருக்கு இதுபற்றி தெரியவந்துள்ளது.
அண்டை நாடான வியட்னாமிடம் காலை 1.38 மணிக்கு மலேசிய அதிகாரிகள் தொடர்பு கொண்டு எங்கள் விமானம் ரேடார் கட்டுப்பாட்டில் இருந்து மாயமாகிவிட்டது என்று கூறியுள்ளனர்.
காலை 5.30 மணிவரை ...
ஆனால் காலை 5.30 மணிவரை விமானத்தை தேடும் பணியையோ, மீட்பு பணியையோ மலேசியா மேற்கொள்ளவில்லை. ராணுவத்தினரின் உதவியையும் விமான நிலைய அதிகாரிகள் நாடவில்லை.
முதலில், விமானிதான் வேண்டுமென்றே விமானத்தை திசை திருப்பியிருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டது. ஏனெனில் மலேசிய கட்டுப்பாட்டு எல்லை வந்தது முதல்தான் விமானம் மாயமாகியுள்ளது. மாயமாகும் இரு நிமிடங்களுக்கு முன்பாக விமானியுடன் பேசிய கோலாலம்பூர் விமான நிலைய அதிகாரிகள், அடுத்ததாக நீங்கள் வியட்னாம் கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பு கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியிருந்தனர்.
இடம் எது என்பது தெரியவில்லை...
ஆனால் விமானி வியட்னாம் கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பு கொள்ளவில்லை.
தற்போதைய நடைமுறையில், வர்த்தக விமானங்களை கண்காணிக்க சரியான வசதியில்லை. கடந்த ஐந்தாண்டுகளில் 2 விமானங்கள் இதுபோல மாயமாகியுள்ளன. ஆனால் அவை கடைசியாக இருந்த இடம் மாயமான இடம் எது என்பது தெரியவில்லை.
எனவே சர்வதேச பயணிகள் விமான அமைப்பு இந்த குறைபாட்டை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மலேசிய விமான விபத்து விசாரணை அமைப்பு பரிந்துரைக்கிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மலேசியா செய்த காலதாமதம் ...
இந்த அறிக்கை குறித்து டிகேஎம் ஏவியேசன் டிராபிக் கட்டுப்பாட்டு ஆலோசகர் டவுக் மேக்லீன் கூறுகையில்;
மாயமான விமானத்தை தேட ஆரம்பிக்க மலேசியா செய்த காலதாமதம் அசாதாரணமானது. இரு நாடுகளுக்கு நடுவே பறந்த ஒரு விமானம் காணாமல் போனால் அதிகபட்சம் 3 அல்லது 5 நிமிடங்களில் ஏதாவது ஒரு நடவடிக்கையை எடுக்க வேண்டும். அமெரி்க்கா, ஐரோப்பிய நாடுகளில் 3 நிமிடங்களில் நடவடிக்கை தொடங்கிவிடும். ஆனால் வியட்னாமுடனான தகவல் பரிமாற்றத்துக்கு எடுத்துக்கொண்ட 17 நிமிடங்கள் என்பது மிக நீண்ட நேரம் என்று கூறினார்.