"புதிய இஸ்லாமிய நாட்டை உருவாக்க முயற்சி"-ஹிலாரி கிளிண்டன் எச்சரிக்கை
நியூயார்க்: புதிதாக ஒரு இஸ்லாமியை நாட்டை உருவாக்கும் வகையில் ஒரு புதிய தீவிரவாத குழு விரைந்து செயல்பட்டுவருவதாக அமெரிக்க முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் தெரிவித்துள்ளார்,
நியூயார்க் நகரில் நடைபெற்ற வெளிநாட்டு உறவுகள் தொடர்பான கவுன்சிலில் பேசிய ஹிலாரி கிளிண்டன், "சிரியாவில் நடைபெற்றுவரும் உள்நாட்டு போரால் அந்த நாட்டுக்கு மட்டும் அல்லாமல் அந்த பிராந்தியத்திலுள்ள பிற நாடுகளுக்கும் பிரச்சினை ஏற்படுகிறது. ஈராக்கிலும் இதனால்தான் பிரச்சினைகள் அதிகரித்து வருகின்றன.
ஈராக்கில் உள்ள நகரங்களை கைப்பற்றும் அளவுக்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு வளர்ந்து செல்லும் என்று நான் நினைத்து கூட பார்க்கவில்லை. இவ்வாறு நாடுகளின் பகுதிகளை கைப்பற்றுவதன் மூலமாக, சர்வதேச நாடுகளின் எல்லைகளையும் அந்த அமைப்பு மாற்றிவருகிறது. கைப்பற்றிய பகுதிகளை கொண்டு இஸ்லாமிய நாட்டை உருவாக்க வாய்ப்புள்ளது. இப்போது பிரச்சினை முற்றிவிட்டது.
சிரியாவில் ஐஎஸ்ஐஎஸ் மற்றும் ஜிகாதி அமைப்புகள் ஆயுதப்பயிற்சியில் சிறந்தவையாக உள்ளன. அவர்களை முறியடிக்க ஐரோப்பா மற்றும் அமெரிக்காவிலிருந்து போர்களில் பயிற்சிபெற்ற ஆயிரம் வீரர்களையாவது சிரியாவுக்கு அனுப்ப வேண்டும். ஒரு நாட்டின் முக்கிய பொறுப்பில் இருந்த அனுபவத்தின் அடிப்படையில் நான் விரும்புவது, சிரிய புரட்சியாளர்களுக்கு அமெரிக்கா ஆயுதங்கள் வழங்கியிருக்க வேண்டும் என்பதுதான். இவ்வாறு அவர் தெரிவித்தார்.