ஆடம்பர பங்களா, சொகுசு கார்... இருந்தும் பிச்சை எடுத்த சவூதி கோடீஸ்வரர் கைது!
ரியாத்: சவுதி அரேபியாவில் பிச்சையெடுத்ததாக போலீசாரால் கைது செய்யப்பட்ட நபர் ஒருவர், விசாரணையில் கோடீஸ்வரர் என தெரிய வந்துள்ளது.
பிச்சை எடுப்பது சவுதி அரேபியாவில் தடை செய்யப்பட்ட குற்றமாகும். இந்நிலையில், மேற்குத் துபாய் பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் பிச்சை எடுத்ததாக மதீனா காவல்துறையினர் சமீபத்தில் ஒருவரைக் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட நபரைக் குறித்து விசாரணை நடத்திய போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். காரணம் விசாரணையில் அவர் ஒரு கோடீஸ்வரன் என்பது தெரியவந்துள்ளது.
அனைத்து வசதிகளும் நிரம்பிய ஆடம்பரமான குடியிருப்பு ஒன்றில் இவர்கள் வசித்து வந்துள்ளனர். சொந்தமாகக் கார் ஒன்றும் வைத்திருந்த இந்தக் குடும்பம் உள்ளூர் மற்றும் வெளியூர் போக்குவரத்துக்கு காரைப் பயன்படுத்தியுள்ளனர் என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
பாதுகாப்பு அதிகாரிகள் இவரது குடும்பத்திலிருந்து 1.2 மில்லியன் சவுதி ரியால் மதிப்புள்ள சொத்துகளைப் பறிமுதல் செய்துள்ளனர். வளைகுடா நாடுகள் ஒன்றிலிருந்து அவர் முதலீட்டாளர் உரிமம் ஒன்றையும் பெற்றிருந்ததாகவும் கூறப்படுகின்றது.
மேலும், இவரது மனைவி, மூன்று குழந்தைகள் உட்பட அனைவரும் சவுதியில் முறையான அனுமதியின்றி தங்கியுள்ளது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட அந்நபர் மீது சட்ட விரோத நடவடிக்கைகள் குறித்து ஒரு விரிவான விசாரணையைத் தொடங்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.