சிரியாவில் மருத்துவமனைகள், பள்ளிகள் மீது ஏவுகணை தாக்குதல்: 50 பேர் பலி
இட்லிப்: சிரியாவில் உள்ள அலெப்போ மற்றும் இட்லிப் மாகாணங்களில் உள்ள 5 மருத்துவமனைகள், 2 பள்ளிகள் மீது ஏவுகணைகள் வீசி தாக்கப்பட்டதில் 50 பேர் பலியாகினர்.
சிரியாவில் கடந்த 5 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது. சிரியா அதிபர் பஷார் அல் ஆசாத்துக்கு ரஷ்யா ஆதரவு அளித்து தனது ராணுவத்தினரை அனுப்பி வைத்துள்ளது. ரஷ்ய ராணுவம் சிரியா ராணுவத்துடன் சேர்ந்து போராளிகளுக்கு எதிராக போராடி வருகிறது.
இந்நிலையில் போராளிகள் ஆதிக்கம் அதிகம் உள்ள ஆலெப்போ மற்றும் இட்லிப் மாகாணங்களில் உள்ள 5 மருத்துவமனைகள் மற்றும் 2 பள்ளிகள் மீது திங்கட்கிழமை ஏவுகணை வீசித் தாக்குதல் நடத்தப்பட்டது.
இதில் குழந்தைகள் உள்பட 50 பேர் பலியாகியுள்ளனர். மேலும் ஏராளமானோர் காயம் அடைந்துள்ளனர் என்று ஐ.நா. தெரிவித்துள்ளது. இந்த சம்பவத்திற்கு ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ரஷ்யா தான் பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளை தாக்கியதாக கூறப்படுகிறது. ஆனால் ரஷ்யாவோ இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளது.