அமெரிக்காவில் பிரதமர் மோடி... கல்பனா சாவ்லா நினைவிடத்தில் அஞ்சலி
வாஷிங்டன்: அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி வாஷிங்டனில் உள்ள இந்திய விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லா நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
இந்தியாவைச் சேர்ந்த கல்பனா சாவ்லா ஹரியானா மாநிலத்தில் உள்ள கர்னல் என்னும் ஊரைச் சேர்ந்வராவார். அவர், விண்வெளியில் பயணம் மேற்கொண்ட முதல் இந்தியப்பெண் என்ற சாதனை புரிந்தவர். கடந்த 2003-ஆம் ஆண்டு விண்வெளியில் இருந்து பூமிக்கு திரும்பிய போது விண்கலம் வெடித்து விபத்துக்குள்ளானதில், கல்பனா சாவ்லா உயிரிழந்தார்.
வாஷிங்டன் நகரின் அர்லிங்டன் பகுதியில் உள்ள இந்திய விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லாவின் நினைவிடம் அமைந்துள்ளது. இந்நிலையில் அமெரிக்க சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, கல்பனா சாவ்லா நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
பின்னர், கல்பனா சாவ்லாவின் கணவர் மற்றும் தந்தையை, இந்தியாவுக்கு வருகை தருமாறு கேட்டுக் கொண்டார். இந்த சந்திப்பின்போது இந்திய-அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் உடன் இருந்தார்.