அம்மாவா? கேர்ள் பிரண்டா? யாரைக் காப்பாற்றுவீர்கள்? - சர்ச்சைக் கேள்வியால் வறுபடும் சீனா!
பெய்ஜிங்: சீனாவில் தீப்பிடித்த கட்டிடம் ஒன்றில் இருந்து நீங்கள் ஒருவரை மட்டும் காப்பாற்ற முடியும் என்று கட்டயப்படுத்தப்பட்டால் நீங்கள் யாரை காப்பாற்றுவீர்கள் உங்கள் தாயையா அல்லது காதலியையா என்ற இடக்குமடக்கான கேள்வி கேட்கப்பட்டுள்ளது.
இந்த சிக்கலான கேள்வி சீனாவின் தேசிய சட்டத் தேர்வின் போது கேட்கப்பட்டுள்ளது. எதிர்கால வழக்கறிஞர்கள் மற்றும் நீதிபதிகளிடம் இந்த கேள்வி கேட்கப்பட்டுள்ளது.இந்த தேர்வில் வெற்றி பெறுபவர்களே அங்கு வழக்கறிஞர்களாக பணியாற்ற முடியும்.
சட்டத் தேர்வில் கேட்கப்படும் கேள்விகள் அத்தனைக்கும் பதில் தரும் சீன சட்டத்துறை இந்தக் கேள்விக்கும் தன் பதிலை அளித்துள்ளது.
சீன மக்கள் அனைவரும் தங்கள் தாயை காப்பாற்ற கடமைப்பட்டவர்கள் என அந்த பதிலில் குறிப்பிடப்பட்டுள்ளது.பெற்றோருக்கான கடமைக்கு பதிலாக காதலுக்கு முன்னுரிமை கொடுப்பது செய்யாத குற்றத்துக்கு சமம் என்று சீனாவின் சட்டத்துறை வெளியிட்ட சரியான விடையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த கேள்விக்கு சீன மக்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஒருவரின் பெற்றோரை பாதுகாக்க வேண்டிய கடமையை ஆபத்தில் இருக்கும் மற்றவர்களை காப்பாற்றும் செயலோடு ஒப்பிடுவது கேலிக்குரியது என சீன இணைய பயன்பாட்டாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
சட்டப்படி மகன் தனது தாயைக் காப்பாற்றவேண்டும் என்று விளக்கிய மற்றொருவர் ஆனால் மற்றவர்களும் ஆபத்தில் இருக்கும்போது அந்த மகன் தனது தாயை மட்டும் காப்பாற்றவேண்டும் என்று அந்த சட்டம் சொல்லவில்லை என்றும் கருத்து தெரிவித்தார்.