அமெரிக்காவைக் கண்டு பிடிச்சது கொலம்பஸ் இல்லையாமே... துருக்கி அதிபர் சொல்கிறார்!
இஸ்தான்புல்: அமெரிக்காவைக் கண்டு பிடித்தது கொலம்பஸ் இல்லை, இஸ்லாமியர்கள் தான் எனத் தெரிவித்துள்ளார் துருக்கி அதிபர் எர்டோகன்.
கடந்த 1492ம் ஆண்டு ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த கொலம்பஸ் தான், அட்லாண்டிக் பெருங்கடலைக் கடந்து அமெரிக்க நிலப்பரப்பைக் கண்டுபிடித்ததாக வரலாற்றுப் புத்தகங்கள் கூறுகின்றன.
ஆனால், அதற்கும் முன்னதாக 12ம் நூற்றாண்டிலேயே இஸ்லாமியர்கள் அமெரிக்காவைக் கண்டுபிடித்து விட்டதாகக் கூறுகிறார் துருக்கி அதிபர். தென் அமெரிக்காவைச் சேர்ந்த இஸ்லாமியத் தலைவர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் இவ்வாறு அவர் பேசியுள்ளார்.
மேலும், இது தொடர்பாக அவர் கூறுகையில், ‘அமெரிக்காவுக்கும் இஸ்லாமுக்கும் 12-ஆம் நூற்றாண்டிலிருந்தே தொடர்பு இருந்து வருகிறது. இஸ்லாமியர்கள், 1178-ஆம் ஆண்டு அமெரிக்கா சென்றனர். கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டுபிடிக்க 1492-இல் பயணம் மேற்கொண்டபோது, கியூபா நாட்டின் கரைப் பகுதியில் மசூதியொன்றைக் கண்டார்' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
துருக்கி அதிபரின் இப்பேச்சு பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.