தொட்டு விடும் தூரத்திற்கு சூரியனை நெருங்கப் போகும் நாசா.. புதிய திட்டம் ரெடி!
சூரியனை தொடும் திட்டம் என்ற பெயரில் தனது புதிய திட்டத்தை நாசா இன்று அறிவிக்கிறது.
வாஷிங்டன்: சூரியன் குறித்த ஆய்வில் புதிய கட்டத்தில் நாசா இறங்கவுள்ளது. சூரியனை ஆய்வு செய்ய டச் தி சன் என்ற பெயரிலான புதிய திட்டத்தை அது இன்று அறிவிக்கவுள்ளது.
சூரியனின் ஆய்வுக்கான புதிய விண்கலம் குறித்த முக்கிய அறிவிப்பை இன்று அது வெளியிடவுள்ளது. இதற்கு முன்பு நாசா அனுப்பிய ஹீலியோஸ் 2 திட்டத்தை விட அதி நவீனமானது இந்த டச் தி சன் திட்டமாகும்.
இதன் மூலம் சூரியனை மிக அருகில் போய் ஆய்வு செய்யவுள்ளனர். இது வரை போகாத அளவுக்கு மிக மிக நெருக்கமாக சூரியனை அணுகவுள்ளது இந்தப் புதிய விண்கலம்.
சூரியனின் மர்மங்கள்
சூரியனின் மர்மங்கள் குறித்து அறிந்து கொள்ள நாசா விஞ்ஞானிகள் தொடர்ந்து முயன்று வருகின்றனர். கடந்த 1976ம் ஆண்டு 370 கிலோ எடை கொண்ட ஹீலியோஸ் 2 விண்கலமானது சூரியனை ஆய்வு செய்ய அனுப்பப்பட்டது. இது சூரியனிலிருந்து 27 மில்லியன் மைல் தொலைவில் நிலை நின்று ஆய்வில் ஈடுபட்டது. சூரியக் கதிர் வீச்சு மற்றும் சூரியப் புயல்கள் குறித்து இது ஆய்வு நடத்தியது.
நெருங்கிப் போக முடியவில்லை
ஆனால் அதன் பிறகு எத்தனையோ நவீனங்கள் வந்தாலும் கூட சூரியனை மேலும் நெருங்க முடியாத நிலைதான் இருந்து வருகிறது. பூமிக்கு வெளியே உள்ள வாழ்க்கை குறித்த ஆய்வோடு, சூரியக் கதிர்வீச்சு குறித்த ஆய்வுக்கும் விஞ்ஞானிகள் முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர். இதற்கு சூரியனை மேலும் நெருங்கி ஆய்வு செய்ய வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது.
குளோசப்பில் போகும் நாசா
இதற்காகவே புதிய திட்டத்தைக் கையில் எடுத்துள்ளது நாசா. ஹீலியோஸ் 2 விண்கலத்தை விட அதி நவீன விண்கலத்தை அது உருவாக்கியுள்ளது. Solar Probe Plus (SPP)எனப்படும் இந்த சோலார் பிராப் பிளஸ் விண்கலமானது, சூரியனை மேலும் நெருங்கி ஆய்வு செய்யப் போகிறது. அந்த ஆய்வு முடிவுகள் மாபெரும் திருப்பங்களை ஏற்படுத்தலாம் என நம்பப்படுகிறது.
அடுத்த ஆண்டு ஆகஸ்ட்டில்
இந்தத் திட்டமானது அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் செயல்படுத்தப்படவுள்ளது. அதற்கான திட்டத்தைத்தான் தற்போது நாசா அறிவிக்கவுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் அனுப்பப்படும் விண்கலமானது சூரியனின் மேற்பரப்புக்கு 60 லட்சம் கிலோமீட்டர் தொலைவு வரை நெருங்கிச் செல்லும். இந்த இலக்கை அடைய அது வீனஸ் கிரகத்தை 6 முறை சுற்றி வர நேரிடும். இதற்கு 7 ஆண்டு கால அவகாசம் அதற்குத் தேவைப்படும்.
தூரம்தான்
60 லட்சம் கிலோமீட்டர் என்பது நெருக்கம் அல்லதான் என்றாலும் கூட இதுவே மிகப் பெரிய விஷயம். இதுவரை நாம் போயிராத நெருக்கமும் கூட என்பதால் நமக்கு நிச்சயம் புதிய தகவல்கள் கிடைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. சூரியனின் காந்தப் புலங்களை நெருக்கமாக ஆராய வாய்ப்பு கிடைக்கும்.
1400 டிகிரி செல்சியஸ்
இந்த இடத்தில் 1400 டிகிரி செல்சியஸ் அதாவது 2550 டிகிரி பாரன்ஹீட் அளவுக்கு வெப்பம் தகிக்கும். ஆனால் அதை சமாளிக்கக் கூடிய அளவுக்கு விண்கலமானது வடிவமைக்கப்பட்டுள்ளதாம். இது நவீன தொழில்நுட்பம் மூலம் சாத்தியமாகியுள்ளதாக ஆஸ்திரேலிய விஞ்ஞானி பிராட் டக்கர் கூறுகிறார்.
கார்பன் கவசம்
11.5 சென்டிமீட்டர் அடர்த்தியிலான கார்பன் கவசத்துடன் கூடியதாக இந்த விண்கலம் உருவாக்கப்பட்டுள்ளது. இது 1400 டிகிரி செல்சியஸ் வெப்பத்தை தாராளமாக தாங்கக் கூடியதாகும். இதுதவிர சூரியனின் மின் காந்தப் புலங்களால் ஏற்படும் பாதிப்பிலிருந்து தப்பும் வகையிலான ஏற்பாடுகளையும் நாசா செய்துள்ளது.
கேள்விகளுக்கு விடை
இந்த விண்கலம் சூரியனின் வெளிப்புற வளிமண்டலத்தை ஆராய்வது மட்டுமின்றி பல நட்சத்திரங்கள் எவ்வாறு இயங்குகிறது என்பது பற்றிய கேள்விகளுக்கு விடை அளிக்கும் வகையில் நாசா தனது ஆய்வை மேற்கொள்ள உள்ளது.
180 மில்லியன் டாலர் செலவில்
இந்த சூரிய ஆய்வு திட்டத்தின் செலவு 180 மில்லியன் டாலர் ஆகும். விண்கலத்தில் 3டி கேமரா, சூரிய காற்று துகள்களைக் கண்டுபிடிக்கும் கருவி, காந்த புலங்களை அளவிடக் கூடிய கருவிகள் பொருத்தப்படவுள்ளது. இந்த திட்டம் குறித்த முக்கிய அறிவிப்புகளை இன்று நாசா அறிவிக்க உள்ளது.