வாஷிங்டன் துப்பாக்கிச் சூடு: சுட்டவனை அடையாளம் கண்டது போலீஸ்
வாஷிங்டன்: வாஷிங்டன் கடற்படைத்தளத்தில் பலரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தானும் சுட்டுக் கொண்ட மர்ம நபரை போலீசார் அடையாளம் கண்டுள்ளனர். துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் உயிரிழந்தவர்களில் 61 வயதான அமெரிக்க வாழ் இந்தியர் விஷ்ணு பண்டிட் என்பவரும் ஒருவர் என கூறப்படுகிறது.
அமெரிக்காவின் கப்பல் படை தளங்களில் ஒன்றான வாஷிங்டன் தளத்தில் நுழைந்த அடையாளம் தெரியாத இரண்டு பேர் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர். சுமார் 3 ஆயிரம் பேர் பணியாற்றி வரும் அங்கு, நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் 12க்கும் அதிகமானோர் காயமடைந்திருக்கலாம் என தெரிகிறது. உயிரிழந்தவர்களில் 61 வயதான அமெரிக்க வாழ் இந்தியர் விஷ்ணு பண்டிட் என்பவரும் ஒருவர் என கூறப்படுகிறது. துப்பாக்கிச்சூடு நடைபெற்றதற்கான காரணங்கள் இதுவரை அறியப்படவில்லை.
அடையாளம் தெரிந்தது
கடற்படை தளத்தில் பலரை துப்பாக்கியால் சுட்டுகொன்றுவிட்டு, தானும் சுட்டுக்கொண்டவரின் உடல் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 34 வயதான அந்த நபர் டெக்சாஸ் பகுதியை சேர்ந்தவர் என்றும், அவரது பெயர் ஏரன் அலெக்சிஸ் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. துப்பாக்கிச்சூடு நடத்திய மற்றொரு நபரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஒபாமா கண்டனம்
வாஷிங்டன் கடற்படைத் தளத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டிற்கு அதிபர் பராக் ஒபாமா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது மிகவும் கோழைத்தனமான செயல் என்றும் அவர் கூறியுள்ளார். இது தொடர்பாக தொலைக்காட்சியில் உரையாற்றிய அவர், "இது தொடர்பான விசாரணையை விரைவாக நடத்த வேண்டும் என்ற நான் உத்தரவிட்டுள்ளேன். காவல்துறையினரின் எல்லா பிரிவினரும் இணைந்து இந்த விசாரணையை மேற்கொள்ள கட்டளையிட்டுள்ளேன். இந்த கோழைத்தனமான செயலை செய்தவரை கைது செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்" என்று கூறியுள்ளார்.