நேபாளத்தில் வெள்ளம், நிலச்சரிவுக்கு 240 பேர் பலி: இந்தியா ரூ.4.8 கோடி நிதி
காத்மாண்டு: நேபாளத்தில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுக்கு இதுவரை 240 பேர் பலியாகியுள்ளனர்.
நேபாளத்தில் கடந்த 3 நாட்களாக கடும் மழை பெய்து வருகிறது. இந்த கனமழையால் மத்திய மற்றும் மேற்கு நேபாளத்தில் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. சுர்கத் மாவட்டத்தில் தான் வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
வெள்ளம் மற்றும் நிலச்சரிவுக்கு இதுவரை 240 பேர் பலியாகியுள்ளனர். பான்கே மற்றும் பர்தியா மாவட்டங்களில் வசித்த 12 ஆயிரம் பேரை அரசு பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைத்துள்ளது.
இந்ச சம்பவங்களால் 46 பேர் காயம் அடைந்துள்ளனர். மேலும் 113 பேரை காணவில்லை. சுர்கத் மாவட்டத்தில் உள்ள பிரேந்திரநகரில் 25 வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. இந்நிலையில் நேபாளத்திற்கு இந்தியா ரூ.4 கோடியே 80 லட்சம் நிவாரணம், 1 விமானம் மற்றும் 3 ஹெலிகாப்டர்களை வழங்கியுள்ளது.
முன்னதாக கடந்த 2 வாரங்களுக்கு முன் திபெத் எல்லையொட்டி உள்ள சிந்துபால்சோக் மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 156 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.