புதிய ரூ.100 கரன்சியால் சர்ச்சை.. நேபாளத்தின் ரூபாய் நோட்டுகளில் இந்திய பகுதிகள்.. என்ன நடக்கிறது?
காத்மாண்டு: நேபாள அரசு வெளியிடும் புதிய கரன்சி நோட்டில் இந்திய பகுதிகளை உள்ளடக்கிய மேப் இடம்பெற்றுள்ளது.. இது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
பொதுவாகவே பெரும்பாலான நாடுகளுக்கு தங்கள் அண்டை நாடுகளுடன் எல்லை விவகாரத்தில் சிறு சிறு மோதல்கள் ஏற்படும். இந்தியாவுக்கும் கூட அதே நிலை தான்..

சீனா, பாகிஸ்தான் உடன் இந்தியாவுக்கு எல்லை மோதல் இருப்பது அனைவருக்கும் தெரியும். அதேநேரம் நேபாளத்திற்கும் கூட எல்லை விவகாரத்தில் கருத்து வேறுபாடு இருப்பது பலருக்குத் தெரியாது. இது தொடர்பாக நாம் விரிவாகப் பார்க்கலாம்.
புதிய கரன்சி நோட்டு: இதற்கிடையே நமது அண்டை நாடுகளில் ஒன்றான நேபாளம் இப்போது வெளியிட்டுள்ள புதிய கரன்சி நோட்டில் உள்ள மேப் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. ஏனென்றால் இந்தியாவுக்குச் சொந்தமான லிபுலேக், லிம்பியாதுரா மற்றும் கலாபானி ஆகிய பகுதிகளை தங்கள் நாட்டிற்குச் சொந்தமானது என்று குறிப்பிடும் வகையில் நேபாள அரசு மேப்பை வெளியிட்டுள்ளது.
இந்த லிபுலேக், லிம்பியாதுரா மற்றும் கலாபானி ஆகிய பகுதிகள் யாருக்குச் சொந்தம் என்பதில் இந்தியா நேபாளம் இடையே கருத்து வேறுபாடு நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.
நேபாள அரசு: இது தொடர்பாக நேபாள அரசு செய்தித் தொடர்பாளர் ரேகா சர்மா கூறுகையில், "நேபாள பிரதமர் புஷ்பகமல் தஹால் பிரசந்தா தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் புதிய 100 ரூபாய் நோட்டுகளை அச்சிட முடிவு செய்யப்பட்டது. லிபுலேக், லிம்பியாதுரா மற்றும் கலாபானி உள்ளிட்ட பகுதிகளை உள்ளடக்கிய புதிய ரூ.100 நோட்டுகளை அச்சடிக்க முடிவு செய்துள்ளோம்.
ஜோதிகா டூர் போனாங்களே! அந்த நேபாளத்தில் அப்படி என்னதான் இருக்கு தெரியுமா?
ஏப்ரல் 25 மற்றும் மே 2 ஆகிய தேதிகளில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது, 100 ரூபாய் நோட்டை மறுவடிவமைப்பு செய்யவும், ரூபாய் நோட்டின் பின்னணியில் உள்ள வரைப்படத்தை மாற்றவும் ஒப்புதல் தரப்பட்டுள்ளது" என்றார். இந்தியாவில் இந்திய ரூபாய் பயன்படுத்துவது போல நேபாளத்தில் நேபாள ரூபாய் கரன்சி பயன்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.
கருத்து வேறுபாடு: இந்த லிபுலேக், கலாபானி மற்றும் லிம்பியாதுரா பகுதிகள் யாருக்கு சொந்தம் என்பதில் இந்தியா மற்றும் நேபாளம் இடையே கடந்த சில காலமாகவே கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. கடந்த 2020 ஜூன் 18ஆம் தேதி இந்த லிபுலேக், கலாபானி மற்றும் லிம்பியாதுரா ஆகிய பகுதிகளை நேபாளத்துடன் இணைத்து தனது அதிகாரப்பூர்வ மேப்பை வெளியிட்டது. இதற்காக நேபாள அரசு தனது அரசியலமைப்பையும் திருத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தியா: அப்போதே இந்தியா அதற்கு மிகக் கடுமையாக எதிர்வினையாற்றி இருந்தது. நேபாளத்தின் இந்த உரிமைகோரல்களை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் லிபுலேக், கலாபானி மற்றும் லிம்பியாதுரா ஆகிய பகுதிகள் இந்தியாவுக்குச் சொந்தமானது என்றும் இந்தியா தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது..
அண்டை நாடான நேபாளம் எல்லையில் சிக்கிம், மேற்கு வங்கம், பீகார், உத்தர பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய ஐந்து மாநிலங்களுடன் இந்தியா 1,850 கிமீக்கு எல்லையைப் பகிர்ந்து கொள்வது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications