புதிய பிரச்சனை.. இந்திய பகுதிகளை சேர்த்து புதிய மேப்.. நேபாள நாடாளுமன்றம் ஒப்புதல்
காத்மாண்டு: நேபாள நாட்டின் புதிய வரைப்படத்தை புதுப்பிப்பதற்கான அரசியலமைப்பு திருத்த மசோதா நேபாள நாடாளுமன்றத்தில் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த மசோதா மூலம் இந்திய பகுதிகளை தன்னுடைய மேப்பில் சேர்த்து அறிவித்துள்ளது நேபாளம்.
Recommended Video
பல ஆண்டுகளாக இந்தியாவுடன் நட்பு பாராட்டி வந்த நேபாளம் அண்மைக்காலமாக இந்தியாவிற்கு எதிராக திரும்பி உள்ளது.
இந்திய பகுதிகளை தங்களுடைய பகுதிகளாக கூறி எல்லையில் திடீரென சண்டையை துவக்கி உள்ளது. எல்லை பிரச்சனைகள் இருந்தாலும் இதுவரை பெரிதாக இரு நாடுகளுக்கும் இடையே பூசல்கள் இருந்தது இல்லை.
இந்தியாவுடன் மோதல்
ஆனால் கடந்த சில வருடங்களாக உறவில் பெரிதாக சுமூக நிலை இல்லாமல் இருந்தது. இந்நிலையில் சீனா எல்லையில் பிரச்சனை செய்த அதேநேரம் நேபாளமும் பிரச்னையில் இறங்கி உள்ளது. சீனா லடாக்கில் பிரச்சனை செய்த போது, நேபாளம் உத்தரகாண்டின் லிபுலேக், பகுதியில் தகராறில் இறங்கி உள்ளது.
இந்தியா மீது புகார்
இந்திய - நேபாள எல்லையாக இல்லாத காளி நதியை, இந்தியா வரையறுத்துள்ளதாகவும், அங்கு தனது ராணுவ படைகளை நிலைநிறுத்தியுள்ளதாக, நேபாள பிரதமர் கே பி சர்மா ஒலி அண்மையில் நாடாளுமன்றத்தில் பேசினார். அத்துடன் நேபாள நாட்டின் பகுதிகளான காலாபாணி, லிபுலேக், லிம்பியதுரா பகுதிகளை இந்தியா ஆக்கிரமிப்த்துள்ளதாகவும், அப்பகுதிகளை இந்தியா சொந்தம் கொண்டாடி அந்நாட்டு வரைபடத்தில் இணைத்துள்ளதாகவும் பிரதமர் கேபி சர்மா ஒலி கூறினார்.
இந்திய பகுதிகள்
இதனிடையே நேபாள அரசு புதிய வரைபடத்தை அண்மையில் வெளியிட்டது. இந்த வரைப்படத்தில் இந்திய பகுதிகளான உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள லிபுலேக், கலபானி மற்றும் லிம்பியாதுரா ஆகியவற்றை இணைத்து .கொண்டுள்ளது. இந்த மூன்று பகுதிகளுக்கும் தங்கள் நாட்டிற்கே சொந்தம் என்று நேபாளம் அறிவித்துள்ளது. இதற்கான நாட்டின் புதிய வரைப்படத்தை புதுப்பிப்பதற்கான அரசியலமைப்பு திருத்த மசோதா நேபாள நாடாளுமன்றத்தில் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. சட்ட திருத்த மசோதாவுக்கு மொத்தம் உள்ள உறுப்பினர்கள் 275 பேரில், 258 பேர் மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
இந்தியா என்ன பதிலடி
இதற்கு இந்திய தரப்பில் இருந்து உடனடியாக எந்த பதிலடியும் வரவில்லை. ஆனால் விரைவில் இந்தியா கடும் பதிலடி கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக லிபுலேக் வரை போடப்பட்டுள்ள 80 கி.மீ சாலையை திறந்ததற்கு இந்தியாவிடம் கடந்த மாதம் காத்மாண்டு எதிர்ப்பு தெரிவித்தது. அப்போதிலிருந்துதான் இரு நாடுகளுக்கிடையே எல்லை பிரச்னை வெடித்துள்ளது.