நேபாள பிரதமர் கொய்ராலா திடீர் ராஜினாமா....புதிய பிரதமராக கேபி சர்மா ஒளி?
காத்மாண்டு: நேபாளத்தில் புதிய மதச்சார்பற்ற அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்த நிலையில் பிரதமர் கொய்ராலா திடீரென ராஜினாமா செய்துள்ளார். புதிய அரசியல் சாசனப்படி புதிய பிரதமரை தேர்ந்தெடுக்க தாம் பதவி விலகியதாக அவர் தெரிவித்துள்ளார்.
உலகின் ஒரே இந்துநாடான நேபாளத்தில் அண்மையில் மதச்சார்பற்ற அரசியல் சாசனம் பிரகடனம் செய்யப்பட்டது.
இப் புதிய அரசியலமைப்புச் சட்டம் அமலுக்கு வந்த பின்னர் முதல்முறையாக நடைபெறும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் 7 நாட்களுக்குள்ளாக அடுத்த பிரதமர் தேர்வு செய்யப்பட்டிருக்க வேண்டும்.
இந்த நிலையில் அந்நாட்டு நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர் தொடங்கியுள்ள நிலையில் பிரதமர் சுஷில் கொய்ராலா தாமாக முன்வந்து பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதுகுறித்து கொய்ராலா கூறுகையில், அடுத்த பிரதமரைத் தேர்வு செய்வதற்கான சட்ட நடைமுறைகளை உடனடியாக தொடங்குமாறு ஜனாதிபதியிடம் வலியுறுத்துவேன் என்றார்.
நேபாள நாட்டின் அடுத்த புதிய பிரதமாராக கேபி சர்மா ஒளி தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.