சீனாவிடம் இருந்து நேபாளத்துக்கு போனது பெட்ரோல்- இந்திய வம்சாளியினர் போராட்டத்தை ஒடுக்கவும் தீவிரம்!
காத்மண்டு: இந்தியா நடைமுறைப்படுத்தி வரும் அதிகாரப்பூர்வமற்ற பொருளாதாரத் தடையைத் தொடர்ந்து சீனாவிடம் இருந்து 73.5 மெட்ரிக் டன் பெட்ரோலை முதல் கட்டமாக நேபாளம் வாங்கியுள்ளது. மேலும் எல்லையில் இந்திய வம்சாவளியினர் நடத்தி வரும் போராட்டத்தை ஒடுக்கும் நடவடிக்கைகளையும் நேபாள பாதுகாப்புப் படை தீவிரப்படுத்தியுள்ளது.
உலகின் ஒரே இந்து நாடு என்ற பெருமைக்குரியது நேபாளம். இந்த நாட்டில் மன்னராட்சி அகற்றப்பட்டு மக்களாட்சி நடைமுறைக்கு வந்தது. இதனைத் தொடர்ந்து "மதச்சார்பற்ற" புதிய அரசியல் சாசனம் அண்மையில் பிரகடனப்படுத்தப்பட்டது. இதில் சில திருத்தங்களை இந்தியா முன்வைத்தது. ஆனால் நேபாளம் இதனை நிராகரித்தது.
மேலும் இந்திய வம்சாவளியினர் வசிக்கும் எல்லை பகுதிகள் பிரிக்கப்பட்டு 2 மாகாணங்களில் சேர்க்கப்பட்டனர். ஆனால் தங்களை ஒரே மாகாணமாக்க வேண்டும் என்பது இந்திய வம்சாவளியினராகிய மாதேஸிகளின் கோரிக்கை.
இதற்காக கடந்த 40 நாட்களாக தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். மேலும் இந்திய- நேபாள எல்லையையும் அவர்கள் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டனர். இதனால் இந்தியாவில் இருந்து நேபாளத்துக்குள் அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்லும் டிரக்குகள் நடுவழியில் நிறுத்தப்பட்டன. இதனால் அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்காமல் நேபாள மக்கள் திண்டாடிப் போயினர்.
இந்தப் போராட்டத்துக்கு இந்தியா ஆதரவு தெரிவிப்பதாகவும் தங்கள் மீது பொருளாதாரத் தடையை இந்தியா விதித்துள்ளதாகவும் நேபாளம் குற்றம்சாட்டியது. இதனால் இந்தியாவுக்கு எதிராக நேபாளத்தில் போராட்டங்கள் வெடித்தன.
இதனைத் தொடர்ந்து சீனா, வங்கதேசத்திடம் இருந்து பெட்ரோல், டீசலை கொண்டுவர நேபாளம் பேச்சுவார்த்தை நடத்தியது. இதனடிப்படையில் முதல் கட்டமாக சீனாவில் இருந்து 73.5 மெட்ரிக் டன் பெட்ரோல் நேபாளத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேபாள எல்லையில் மாதேஸிகளின் போராட்டத்தை ஒடுக்கும் நடவடிக்கைகளையும் அந்நாட்டு பாதுகாப்பு படையினர் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
40 நாட்களுக்குப் பின்னர் நேபாள எல்லைப் பகுதியை பாதுகாப்புப் படையினர் தங்களது கட்டுப்பாட்டுக்கு கொண்டுவந்தனர். இதனைத் தொடர்ந்து நேபாளத்தில் இருந்து டிரக்குகள் இந்தியாவுக்கு வரத் தொடங்கின. ஆனால் இந்தியாவில் இருந்து சென்ற டிரக்குகள் இதுவரை நேபாளத்துக்குள் நுழையாமல் பல கி.மீ தொலைவுக்கு நிறுத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.