தள்ளாத வயதிலும் பள்ளிக்கு செல்லும் தாத்தா: கற்பதற்கு வயது தடையில்லை
காத்மண்டு: கல்வி கற்பதற்கு வயது ஒரு தடையல்ல என்று நிரூபித்துள்ளார் நேபாள நாட்டைச் சேர்ந்த ஒரு முதியவர். துர்கா காமி என்ற 68 வது முதியவர் பள்ளிச் சீருடை அணிந்து சிறுவயது மாணவர்களுடன் இணைந்து தினமும் பள்ளிக்குச் செல்லும் காட்சி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
நீளமான வெள்ள தாடி வைத்துள்ள தாத்தா துர்கா காமி, தலையில் தொப்பி அணிந்து கையில் கைத்தடி உதவியுடன் கம்பீரமாக பள்ளி சீருடை அணிந்து பள்ளிக்கு சென்று வருகின்றார். அவர் தனது குழந்தை பருவத்தில் இருந்தே படிப்பை முடித்துவிட்டு ஆசிரியராக வேண்டும் என்பது அவரின் இலக்காகும். இப்போதுதான் அதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளதாம்.
காத்மான்டுவில், ஸ்யாங்ஜா மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ கால பைரவர் உயர்நிலை பள்ளியில் பயின்று வருகின்றார் துர்கா காமி. நேபாள மாநிலத்தின் வயது மிகுந்த பள்ளி மாணவன் இவராவர். முன்னதாக ஆரம்ப பள்ளியில் தனது படிப்பை முடித்தார். பின்னர், மேல்நிலை பள்ளியில் சேர்ந்தார்.
ஸ்ரீ கால பைரவர் உயர்நிலை பள்ளி ஆசிரியர் கொய்ராலா அவருக்கு மற்ற மாணவர்களை போல் படிக்க புத்தகம் மற்றும் சீருடையை வழங்கி அவருக்கு முன்னுரிமை அளித்தார். தன் அப்பா வயதில் இருக்கும் ஒருவருக்கு பாடம் எடுப்பதில் தனக்கு மிகவும் வியப்புடனும், மகிழ்ச்சியுடனும் இருப்பதாக ஆசிரியர் தெரிவித்துள்ளார்.
வகுப்பில் 20 மாணவர்களுடன் அவர் பத்தாம் வகுப்பு படித்து வருகின்றார். சக மாணவர்கள் அவருடன் சேர்ந்து பல்வேறு விளையாட்டுகளில் கலந்து கொள்கின்றனர். 14 மற்றும் 15 வயது மாணவர்களுடன் படித்து வருவது தனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாக கூறுகிறார்.
பள்ளிக்கு செல்வதினால் என் கவலைகள் அனைத்தும் மறக்கின்றேன் என்று கூறும் துர்கா காமி, சாகும் வரை படிக்க வேண்டும் என்பதே எனது லட்சியம். வயது ஒரு தடையில்லை என்று என்னை போன்று உள்ளவர்கள் புரிந்து கொள்ளலாம் என்று கூறியுள்ளார்.
ஆசிரியர் ஆக வேண்டும் என்ற இளம் வயது கனவுக்கு வறுமை தடைக்கல்லாக அமைந்தது எனக் கூறும் துர்கா காமி, தற்போதுதான் கல்வி கற்கும் வாய்ப்பு கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளார். தனக்கு 6 பிள்ளைகளும் 8 பேரப் பிள்ளைகளும் உள்ளதாகவும், சாகும் வரை ஏதாவது ஒன்றை கற்றுக்கொண்டே இருக்க விரும்புவதாகவும் துர்கா காமி கூறியுள்ளார்.