இன்று மசோதா தாக்கல்: டரம்பின் புதிய திட்டம் நிறைவேறுமா அல்லது ஓபாமாகேர் நீடிக்குமா?
வாஷிங்டன்(யு.எஸ்): கடந்த முறை வாக்கெடுப்பிற்கு சில நிமிடங்களுக்கு முன்னதாக வாபஸ் பெறப்பட்ட ட்ரம்பின் புதிய மருத்துவக் காப்பீடுத் திட்டம் மீண்டும் வாக்கெடுப்புக்கு வருகிறது.
வியாழக்கிழமை, அமெரிக்க உறுப்பினர்கள் சபையில் புதிய மசோதா தாக்கல் செய்யப்படும். இது நிறைவேறும் பட்சத்தில் முந்தைய ஒபாமாகேர் திட்டம் நீக்கப்பட்டு, அதற்குப் பதிலாக ட்ரம்பின் புதிய திட்டம் அமலுக்கு வரும்.
புதிய திட்டத்தால் 2026ம் ஆண்டுக்குள் 26 மில்லியன் மக்கள் மருத்துவக் காப்பீட்டை இழக்க நேரிடும் என்று அவை பட்ஜெட் கமிட்டியின் ஆய்வறிக்கை தெரிவித்து இருந்தது.
அதையொட்டி, குடியரசுக் கட்சியினரே இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். மேலும், ஏற்கனவே நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு புதிய காப்பீடு கிடையாது என்பதுவும் இத்திட்டத்தின் ஒரு அம்சமாகும்.
ட்ரம்ப் தலையிட்டு, ஏற்கனவே நோய்வாய்ப் பட்டவர்களுக்கும் காப்பீடு கிடைக்கும் படி வழி செய்ய வலியுறுத்தியுள்ளார். அதற்காக அடுத்த ஐந்தாண்டுகளுக்கு 8 பில்லியன் டாலர் ஓதுக்கீடு செய்வதாகவும் கூறியுள்ளார்.
இதையடுத்து திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த இரண்டு குடியரசுக் கட்சி அவை உறுப்பினர்கள் ஃப்ரெட் அப்டன், பில்லி லாங் தற்போது ஆதரவு தெரிவித்துள்ளனர்.
அவர்கள் இருவரையும் தொடர்ந்து மேலும் பல எதிர்ப்பாளர்கள் ஆதரவு தெரிவிக்க முன் வந்துள்ளதாக தெரிகிறது.
துணை அதிபர் மைக் பென்ஸ், அவை உறுப்பினர்களிடம் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார்.
இந் நிலையில், புதிய திட்ட மசோதா வாக்கெடுப்பு வர உள்ளதாக குடியரசுக் கட்சி அவை மெஜாரிட்டி லீடர் கெவின் மெக்கரத்தி தெரிவித்துள்ளார்.
ஒபாமாகேர் திட்டத்தை வாபஸ் பெற்றே தீருவேன் என்று முழக்கமிட்டே ஆட்சியைப் பிடித்த ட்ரம்ப் அதை செய்து முடிக்காமல் விட மாட்டேன் என்று கங்கனம் கட்டிக் கொண்டு செயல்படுகிறார்.
ட்ரம்பின் இந்த புதிய முயற்சி வெற்றி பெறுமா?. அமெரிக்க நேரப்படி வியாழன் இரவுக்குள் தெரிந்து விடும்.
- இர தினகர்