அமெரிக்க வணிக வளாகத் துப்பாக்கிச்சூடு: தற்கொலை செய்து கொண்ட குற்றவாளி
நியூஜெர்சி: நியூஜெர்சியில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் நேற்று முந்தினம் துப்பாக்கிச் சூடு நடத்திய மர்ம மனிதன் தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கென்யாவில் தீவிரவாதிகள் புகுந்து துப்பாக்கிச் சூடு நடத்தியதில் அப்பாவி பொதுமக்கள் பலர் பரிதாபமாகப் பலியானார்கள். இந்நிலையில் நேற்று முன் தினம் மாலை அமெரிக்காவில் நியூஜெர்சியில் உள்ள வணிக வளாகத்தில் கடைகள் மூடப் படுகின்ற வேளையில் மர்ம நபர் உள்ளே நுழைந்து துப்பாக்கிச்சூடு நடத்தியதாக தகவல் வெளியானது.
இந்நிலையில் துப்பாக்கிச் சூடு நடத்திய மர்ம நபர் உள்ளே தான் பதுங்கி இருக்க வேண்டும் என போலீசார் தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது வணிக வளாகத்தின் பின்பகுதியில் மர்ம நபர் தன்னைத் தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டதைக் கண்டுபிடித்தனர்.
இத்தாக்குதலில் வேறு உயிர்ச்சேதம் எதுவுமில்லை எனவும், தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்துடனேயே மர்ம மனிதர் வணிக வளாகத்தினுள் நுழைந்திருக்க வேண்டும் என போலீசார் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
போலீசார் மேற்கொண்டு நடத்திய விசாரணையில் மர்ம நபரின் பெயர் ரிச்சர்டு ஹாப் எனவும், வயது 20 எனவும் தெரிய வந்துள்ளது. மேலும், ரிச்சர்டு மதுப் பழக்கத்திற்கு அடிமையாக இருந்துள்ளார் என்பதும் அம்பலமாகியுள்ளது. துப்பாக்கிச் சூடு மற்றும் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் மேற்கொண்டு விசாரித்து வருகின்றனர்.