சவுதி பழைய மன்னரின் ஆதரவாளர்கள் பதவி பறிப்பு.. புதிய மன்னர் சல்மான் அதிரடி!
சவுதி: சவுதி அரேபியாவின் புதிய மன்னராக பொறுப்பேற்றுள்ள சல்மான், தனது ஆதிக்கத்தை அரசில் நிலைநாட்ட பல அதிரடி மாற்றங்களை செய்து வருகிறார். அமைச்சரவை மாற்றியமைத்ததுடன், உளவுத்துறை தலைவரையும் மாற்றியுள்ளார். மறைந்த பழைய மன்னர் அப்துல்லாவுக்கு நெருக்கமானவர்கள் அனைவரும் டம்மியாக்கப்பட்டு வருகின்றனர்.
சவுதி மன்னராக இருந்த அப்துல்லா அவரது 90வது வயதில் சில தினங்கள் முன்பு உயிரிழந்ததை தொடர்ந்து, புதிய மன்னராக சல்மான் பதவியேற்றுக் கொண்டார். இதைத் தொடர்ந்து அமைச்சரவையில் அதிரடி மாற்றங்களை செய்துள்ள சல்மான், பல்வேறு உயர் அதிகாரிகளையும் பணியிடமாற்றம் செய்துள்ளார்.
புதிதாக மன்னராக பதவியேற்றதை மக்கள் கொண்டாடும் வகையில், ராணுவத்துறை உள்ளிட்ட அனைத்து துறை அரசு ஊழியர்களுக்கும் 2 மாத அடிப்படை சம்பளத்தை போனசாக அறிவித்துள்ளார் மன்னர். மாணவர்களுக்கும், ஓய்வூதியதாரர்களுக்கும் கூட இதேமாதிரி இரட்டிப்பு வருவாய் வழங்கப்பட்டுள்ளது.
டிவிட்டர் தளத்தில் சல்மான் இதுகுறித்து கூறுகையில், "எனதருமை மக்களே, நீங்கள் இதற்கு தகுதியானவர்கள். நான் என்னதான் அள்ளி கொடுத்தாலும், அது உங்களுக்கு ஈடாகாது" என்று புகழ்ந்துள்ளார்.
மன்னர் எடுத்துள்ள முக்கிய முடிவுகளில் மற்றொன்று, அந்த நாட்டு உளவுத்துறை தலைவரை மாற்றியதாகும். இளவரசர் காலித் பின் பந்தர் பின் அப்துல் ஆசிஸ் அல் சவுத் உளவுத்துறை தலைவர் பதவி பறிக்கப்பட்டவராகும்.
புதிய உளவுத்துறை தலைவராக ஜெனரல் காலித் பின் அலி பின் அப்துல்லா நியமிக்கப்பட்டுள்ளார். இந்த பதவி அமைச்சருக்கு இணையான அதிகாரம் உள்ளதாகும். முன்னாள் மன்னர் அப்துல்லாவின் நெருங்கிய உறவினரான இளவரசர் பந்தர் பின் சுல்தானிடமிருந்த மன்னருக்கான ஆலோசகர் மற்றும், தேசிய பாதுகாப்பு செயலாளர் ஆகிய பதவிகளும் பறிக்கப்பட்டுள்ளன.
இந்த நடவடிக்கைகளை வைத்து பார்க்கும்போது அப்துல்லா ஆதரவாளர்களிடமிருந்து முழு அதிகாரத்தையும் தானே பறித்து வைத்துக்கொள்ள வேண்டும் என்ற அவசரம் தற்போதைய மன்னருக்கு இருப்பது தெரிகிறது.