கடும் பனிப் புயல்... உறைந்து போன அமெரிக்கா.. 8 பேர் பலி -அவசர நிலைப் பிரகடனம்!
நியூயார்க்: அமெரிக்கா முழுவதும் கடும் பனிப் புயல் வீசி வருகிறது. இதனால் அமரிக்காவும், கனடாவும் கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளன. இந்த கடுமையான பனிப் புயலுக்கு இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
கடும் பனிப்பொழிவு காரணமாக அமெரிக்காவின் வடக்குப் பகுதி மற்றும் கனடா நாடுகள் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளன.
கிட்டத்தட்ட ஒட்டுமொத்த அமெரிக்காவும் பனிப் புயலில் சிக்கியுள்ளது. அனைத்து மாகாணங்களும் பனிப் புயலால் பாதிப்பைச் சந்தித்துள்ளன.
நியூயார்க் நகரம் உள்ளிட்ட பல இடங்களில் வீசிய கடும் பனிப்புயல் காரணமாக, அங்கு கட்டிடங்கள் மற்றும் சாலையில் 2 அடி உயரத்திற்கு பனிக்கட்டிகள் தேங்கியுள்ளன.
பனிப்புயலில் சிக்கி இதுவரை 8 பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
சாலைகள் முழுவதும் பனிக்கட்டிகள் நிரம்பி இருப்பதால், ஆங்காங்கே வாகனங்கள் சிக்கி நிற்கின்றன. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப் பட்டுள்ளது. வெளியில் எங்கும் செல்ல இயலாதபடி, மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர்.
விமான நிலைய ஓடு பாதைகளிலும் பனிக்கட்டிகள் உறைந்து கிடப்பதால், பல இடங்களில் விமான போக்குவரத்தும் ரத்து செய்யப் பட்டுள்ளது.
அமெரிக்காவின் 50 மாகாணங்களுமே பனிப்பொழிவால் பாதிக்கப்பட்டுள்ளதால், அங்கு அவசரநிலை பிரகடனம் செய்யப் பட்டுள்ளது. சாலைகளில் சிக்கியுள்ள கார்களில் இருப்பவர்களை மீட்பதற்கு ஏதுவாக மீட்பு படைகள் ஆங்காங்கே தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
ஆர்க்டிக் பிரதேசத்திலிருந்து வீசும் இந்தப் பனிப் புயல் நாளை மேலும் மோசமடையும் என்று கூறப்படுகிறது. இந்த கடுமையான பனி காரணமாக அமரெிக்காவின் பாதிப் பகுதியில் வெப்பநிலை உறை நிலையில் உள்ளன.
நியூயார்க் நகரம்தான் கடுமையான பாதிப்புக்குள்ளாகியுள்ளது. இதனால் மக்கள் வெளியில் வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் வாகனங்கள் ஓட்டத் தடை விதிக்கப்பட்டுள்ளது.