நைஜீரியாவில் தீவிரவாத தாக்குதலால் பள்ளிகள்,கல்லூரிகள் மூடல்
நைஜர்: தீவிரவாதிகளின் தாக்குதலால் நைஜீரியாவில் பள்ளி, கல்லூரிகள் காலவரையன்றி மூடப்பட்டுள்ளன.இதனால் குழந்தைகளின் கல்வி கேள்விக்குறி ஆகி உள்ளது.
மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் இஸ்லாமிய சட்டதிட்டங்களுக்கு உட்பட்ட ஆட்சியை அமைக்க வேண்டுமென "போக்கோ ஹரம்" என்ற தீவிரவாத அமைப்பு ஆயுதமேந்திய போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறது.
நைஜீரியாவில் உள்ள கிறிஸ்துவ தேவாலயங்களை தாக்கி அழிக்கும் போக்கோ ஹரம் தீவிரவாதிகள் அப்பாவி பொதுமக்களையும் ஈவிரக்கமின்றி கொன்று குவித்து வருகின்றனர்.
இஸ்லாமிய அடிப்படை கொள்கைகளுக்கு எதிரான மேற்கத்திய பாடத் திட்டங்களையும் எதிர்த்து வரும் இவர்கள் அந்த பாடத் திட்டங்களை அடிப்படையாக வைத்து நடத்தப்படும் 200 க்கும் மேற்பட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளை தீயிட்டு எரித்து நாசப்படுத்தியுள்ளனர்.
யோபே மாநிலத்தில் உள்ள ஒரு கல்லூரிக்குள் கடந்த வாரம் புகுந்த போக்கோ ஹரம் தீவிரவாதிகள் 42 மாணவர்களை ஈவிரக்கமின்றி சுட்டுக் கொன்றனர். பல மாணவிகளை தூக்கிச் சென்று, கற்பழித்து சின்னாபின்னப்படுத்தினர். மேலும் பல பள்ளிகள் மற்றும் கல்லூரிகளின் மீது அதிரடியாக தாக்குதல் நடத்த இவர்கள் திட்டமிட்டுள்ளதாக அரசுக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து, பாதுகாப்பு குறைவாக இருக்கும் வடகிழக்கு பகுதிகளில் இயங்கும் பல பள்ளிகள் மற்றும் 5 கல்லூரிகள் மூடப்படுவதாக நைஜீரியா கல்வித் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. சில சிறிய பள்ளிகளை பெரிய கல்லூரிகளுடன் இணைத்தும் உத்தரவிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே, கல்வியறிவில் மிகவும் பின்தங்கியுள்ளதால் உலக நாடுகளுடன் அதிக தொடர்பின்றி நைஜீரிய மக்கள் முன்னேற்றம் அடையாமல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். பள்ளிகளை மூடும் இந்த அறிவிப்பானது, இவர்களின் எதிர்கால வாழ்க்கையில் மேலும் நிலையற்ற தன்மையை ஏற்படுத்தக் கூடும் என சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.