கொழுக்கட்டை தொண்டையில் சிக்கி 9 பேர் பலி... மென்று தின்னாததால் வந்த வினை...ஜப்பானில்!
டோக்கியோ: ஜப்பானில் புத்தாண்டு தினத்தன்று கொழுக்கட்டை போன்ற அவர்களது பாரம்பரிய உணவை நன்கு மென்று சாப்பிடாமல் விழுங்கியதால், மூச்சுத்திணறல் ஏற்பட்டு 9 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 128 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
ஜப்பானின் பாரம்பரிய உணவுகளில் ஒன்றாக கருதப்படுகிறது மோச்சி. இனிப்பு அவரை சேர்த்து காய்கறி சூப்பில் தயாரிக்கப் படும் அரிசி கேக் போன்றது இது. பார்ப்பதற்கு இது நம்மூர் கொழுக்கட்டை போல் இருக்கும். இந்த உணவிற்கு ஒட்டிக் கொள்ளும் குணம் உண்டு. எனவே, இதனை வாயில் போட்டு நன்றாக மென்று சாப்பிட வேண்டும்.
ஆனால், புத்தாண்டு தினத்தன்று அவசர கதியில், கொண்டாட்டப் பரபரப்பில் பலர் இதனை அப்படியே விழுங்கியுள்ளனர். இதனால், மோச்சி அவர்களது தொண்டைப் பகுதியில் ஒட்டிக் கொள்ள, பாதிக்கப்பட்டவர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். புத்தாண்டு தினம் தொடங்கி அடுத்த மூன்று நாட்களில் மட்டும் இவ்வாறு மோச்சி தொண்டையில் சிக்கியதாக 128 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப் பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.