சமையலில் அதிக வாசனை.. இந்தியர்களுக்கு வீடு கிடையாதாம்- சிங்கப்பூர் வீட்டுக்காரர்கள் அடாவடி!
சிங்கப்பூர்: இந்தியர்களின் வீடுகளில் அதிக வாசனையுடன் சமையல் செய்வதால் சிங்கப்பூரில் வாடகைக்கு வீடு கொடுக்க உரிமையாளர்கள் தயங்குவதாக கூறப்படுகிறது.
சிங்கப்பூரின் மொத்த மக்கள் தொகையில் 74 சதவீதம் பேர் சீனாவை பூர்வீகமாக கொண்டவர்கள். 13 சதவீதம் பேர் மலாய் மக்களாகும். 9 சதவீதம் பேர் இந்தியாவை பூர்வீகமாகக் கொண்டவர்கள்.
அந்தநாட்டு மக்களில் 90 சதவீதம் பேர் சொந்த வீடுகளில்தான் வாழ்கிறார்கள். வெளிநாடுகளில் இருந்து வேலை தேடி செல்வோர்தான் வாடகைக்கு வீடு தேடி அலைகிறார்கள்.
இப்படி வீடு தேவைப்படுவோர்களுக்கு நாட்டை காரணம் காட்டி வீடு அளிக்க மறுக்கிறார்கள் வீட்டின் உரிமையாளர்கள்.
சிங்கப்பூரில் செயல்படும் வீடு வாங்குவது விற்பது, வாடகைக்கு விடுவது தொடர்பான இணையதளங்களில், இந்தியர்கள் மற்றும் சீனர்களுக்கு வீடு அளிக்க முடியாது என்று வீட்டின் உரிமையாளர்கள் தெளிவாக கூறியுள்ளதை பார்க்க முடிகிறது.
சிங்கப்பூர் அரசியல்சாசனப்படி எந்த ஒரு மனிதரையும் அவர் சார்ந்த நாட்டை காரணம் காட்டி பாரபட்சமாக நடத்த கூடாது என்று வரையறுக்கப்பட்டுள்ளது. ஆனால் தனிமனிதர்களின் முடிவில் அரசு எந்த அளவுக்கு தலையிட முடியும் என்ற கேள்வியும் எழுகிறது.
இந்தியர்களுக்கு வீடு கொடுக்க உரிமையாளர்கள் மறுக்க முக்கிய காரணம், நாம் சமையலறையை சுத்தமாக வைத்துக்கொள்வதில்லை என்பதுதான். இரண்டாவது காரணம், இந்திய சமயலில் அளவுக்கு அதிகமாக வாசனை வீசுவதாக சிங்கப்பூர்காரர்கள் கருதுவதுதான்.
நம்ம ஆட்களுக்கு எதிலும் மசாலா தேவை, ஆனால் சிங்கப்பூர்வாசிகளுக்கு அதில் இஷ்டம் இல்லையாம். அதனால்தான் நமது நறுமணத்தை அவர்கள் நெடி என்று நினைத்து மூக்கை மூடிக்கொள்கிறார்கள்.
இந்தியாவில் சில வீட்டு உரிமையாளர்கள் மாமிசம் சாப்பிடுவோருக்கு வீடு இல்லை என்கிறார்கள், ஆனால் சிங்கப்பூரிலோ இந்தியர்களுக்கே வீடு இல்லை என்கிறார்கள். இதனால் சிங்கப்பூர் செல்லும் மக்கள் வீடு கிடைக்காமல் சிரமப்படுகிறார்கள்.
ஹிந்துயிசத்துக்கான உலகளாவிய சங்க தலைவரான ராஜன்ஜெட் இதுதொடர்பாக சிங்கப்பூர் அதிபர் டோனி டான், மற்றும் பிரதமர் லீசியென் லூங் ஆகியோரை சந்தித்து இப்பிரச்னைக்கு முடிவுகட்ட கோரிக்கைவிடுத்துள்ளார்.