36 ஆண்டுகளுக்குப் பின் மாநாடு... தலைநகரில் சுப, துக்க நிகழ்ச்சிகளுக்கு தடை... ‘குழந்தைசாமி’ அதிரடி
பியாங்யாங்:வடகொரியாவில் 36 ஆண்டுகளுக்குப் பின் நடைபெறும், ஆளும் கட்சியின் மாநாட்டை ஒட்டி, தலைநகர் பியாங்யாங்கில் சுப மற்றும் துக்க காரியங்களை நடத்தக்கூடாது என வித்தியாசமான தடை விதிக்கப்பட்டுள்ளது.
வட கொரியா ஒரு தினுசான நாடு. எதைச் செய்தாலும் அதில் ஒரு முரட்டுத்தனம் நிறைந்திருக்கும். இப்போதும் கூட அப்படிப்பட்ட காரியம் ஒன்று நடந்துள்ளது அங்கு.
கடந்த 36 ஆண்டுகளில் முதல் முறையாக வட கொரியாவில் ஆளும் தொழிலாளர் கட்சியின் மாநாடு நடைபெறவுள்ளது. இதையடுத்து தலைநகர் பியாங்யாங்கில் பல்வேறு கட்டுப்பாடுகளை சர்வாதிகார ஆட்சி விதித்துள்ளது.
தடை...
திருமண நிகழ்ச்சிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏன் யாராவது இறந்தால் இறுதிச் சடங்கைக் கூட செய்யக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளனராம். வெள்ளிக்கிழமை இந்த மாநாடு தொடங்கவுள்ளது. மாநாடு முடியும் வரை தடை உத்தரவு அமலில் இருக்கும்.
சோதனை...
மேலும் நகரை விட்டு யாரும் வெளியேறக் கூடாது. அதேபோல நகருக்குள்ளும் யாரும் வரக் கூடாது. இதை உறுதி செய்ய அடிக்கடி காவல்துறையினரும், ராணுவத்தினரும் சோதனை நடத்தி வருகின்றனராம்.
தற்காலிக தடை...
மாநாட்டு ஏற்பாடுகளுக்கு எந்த இடையூறும் வரக் கூடாது என்பதற்காகத்தான் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாம். இருப்பினும் இது தற்காலிகமானதுதானாம். மாநாடு முடிந்ததும் இந்தத் தடை நீங்கி விடுமாம்.
36 ஆண்டுகளுக்குப் பின்...
கடைசியாக ஆளும் தொழிலாளர் கட்சியின் மாநாடு 1980ம் ஆண்டு நடந்தது. அப்போது கிம் ஜாங் இல் பதவியில் இருந்தார். இப்போது அவரது மகன் கிம் ஜாங் உன் பதவியில் உள்ளார். வட கொரியாவை ஆண்டு வரும் இந்த சர்வாதிகாரியால் தென் கொரியாதான் தினசரி தலைவலியை அனுபவித்து வருகிறது.
5 நாட்கள்...
33 வயதாகும் கிம் ஜாங் உன், இந்த மாநாட்டின் மூலம் நாட்டின் அசைக்க முடியாத தலைவராக தன்னை வெளிப்படுத்தவுள்ளார். இந்த மாநாடு 5 நாட்கள் நடக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.