செய்தியாளர் கொலைக்கு கோபமாக இரங்கல் தெரிவித்து விட்டு கோல்ப் விளையாடப் போன ஒபாமா!
வாஷிங்டன்: அமெரிக்க செய்தியாளர் ஜேம்ஸ் போலி படுகொலைக்கு இரங்கலும், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளை ஒழிப்போம் என்று கோபமாகவும் பேசி அறிக்கை வெளியிட்ட அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, அதன் பின்னர் கோல்ப் விளையாடப் போனது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிரியாவில் சிறை பிடித்த அமெரிக்க செய்தியாளர் ஜேம்ஸ் போலியை, கொடூரமான முறையில் தலையைத் துண்டித்துக் கொலை செய்துள்ளனர் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள். இதை வீடியோவாகவும் வெளியிட்டு அனைவரையும் அதிர வைத்துள்ளனர்.
இந்தக் கொலைக்கு கடும் கண்டனம் தெரிவித்து அறிக்கை விட்ட அதிபர் ஒபாமா தீவிரவாதிகளுக்கும் சாபம் விடுவது போல கோபமாக பேசியுள்ளார். ஆனால் அப்படிச் செய்து விட்டு அவர் அடுத்து கோல்ப் விளையாடப் போனதுதான் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜூலையில் மீட்பு முயற்சி
போலி உள்ளிட்டவர்களை மீட்க எங்களது ராணுவம் முயன்றதாக பென்டகன் கூறியுள்ளது. கடந்த ஜூலை மாதம் இந்த முயற்சி நடந்ததாகவும், அது தோல்வியில் முடிந்ததாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது. ஆனால் இந்த ரெய்டு நடவடிக்கை குறித்து போலி கொலைக்குப் பின்னர்தான் அது பகிரங்கப்படுத்தியுள்ளது.
ரூ. 606 கோடி கேட்ட தீவிரவாதிகள்
மேலும் தீவிரவாதிகள், போலியை விடுவிக்க ரூ. 606 கோடி பணத்தைக் கேட்டதாக ஒரு தகவல் கூறுகிறது. ஆனால் பணம் கொடுக்க அமெரிக்கா மறுத்து விட்டதாகவும், இதனால்தான் போலி கொல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
தப்பிக்க முயன்ற போலி
தீவிரவாதிகள் பிடியிலிருந்து ஒருமுறை போலி தப்பிக்க முயன்றதாக தகவல்கள் கூறுகின்றன. ஆனால் அவர்களை தீவிரவாதிகள் பிடித்து விட்டனர். தப்பிக்க முயன்றதற்காக கடுமையான தண்டனையும் கொடுத்ததாக கூறப்படுகிறது.
ஒபாமாவின் கடும் எச்சரிக்கை
போலி படுகொலைக்கு ஒபாமா கடும் கண்டனமும், எச்சரிக்கையும் விடுத்துள்ளார். 21ம் நூற்றாண்டில் இப்படிப்பட்ட தீவிரவாதிகளுக்கு இடமே இல்லை என்று அவர் எச்சரித்துள்ளார்.
மோசூல் அணைப் பகுதியில் தாக்குதல் தீவிரம்
இதற்கிடையே, படுகொலை வீடியோ வெளியானதைத் தொடர்ந்து அமெரிக்க விமானப்படையினர் தீவிரவாதிகள் மீதான தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளனர். மோசூல் அணைப் பகுதியில் 12 முறை அமெரிக்க விமானங்கள் தாக்குதல் நடத்தியுள்ளன.
கோல்ப் விளையாடப் போன ஒபாமா
இதற்கிடையே, அதிபர் ஒபாமா போலி படுகொலை குறித்து கண்டனம் தெரிவித்து கோபமாக அறிக்கை வாசித்த பின்னர் மீண்டும் தனது விடுமுறைக் கொண்டாட்டத்தைத் தொடர்ந்ததும், கோல்ப் விளையாடப் போனதும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
மொத்தத்தில் தற்போது இன்னொரு அமெரிக்க செய்தியாளரின் உயிருக்குத்தான் ஆபத்து அதிகரித்துள்ளது.