மாற்றி யோசித்த ஒபாமா... கியூபாவை நோக்கிய அமெரிக்க புன்னகையின் பின்னணி!
வாஷிங்டன்: கடந்த 50 வருடங்களாக நீடித்து வந்த அமெரிக்க - கியூபா துவேஷம் பொலபொலவென இன்று உதிர்ந்து விட்டது. கியூபாவை நோக்கி புன்னகை பூக்கத் தொடங்கியுள்ளது அமெரிக்கா. இந்த திடீர் மாற்றத்திற்கு போப்பாண்டவர் முதலாம் பிரான்சிஸ் எடுத்து வைத்த முக்கிய அடிகள் மட்டும் காரணமல்ல, இதுவரை இருந்த அமெரிக்க அதிபர்கள் உணர முன்வராத ஒன்றை அதிபர் பராக் ஒபாமா உணர்ந்து தெளிந்ததும் இன்னொரு முக்கியக் காரணமாகும்.
கியூபாவை தனித்து வைத்து விட்டு இனியும் புல்லைப் பிடுங்கிக் கொண்டிருப்பது பயனற்ற செயல், நடைமுறைக்கும் ஒத்து வராதது- இதைத்தான் ஒபாமா உணர்ந்து தெளிந்தார். இதை செய்யத் தவறியவர்கள் அவருக்கு முன்பு இருந்த அதிபர்கள். ஒபாமா சற்று மாற்றி யோசித்ததுதான்... Yes we can.. என்ற புதிய வரலாற்றை எழுத முடிந்திருக்கிறது.
இப்படி மாற்றி யோசித்ததன் காரணமாகவே கடந்த 18 மாதங்களாக நடந்து வந்த ரகசியப் பேச்சுவார்த்தை பலன் தந்து இப்போது, கியூபாவைத் தனிமைப்படுத்தும் கொள்கையை கைவிடுவதாக அமெரிக்க அதிபர் ஒபாமா பகிரங்கமாக அறிவிப்பு வெளியிட வழி வகுத்துள்ளது.
ஒபாமா முடிவை அறிவித்து விட்டாலும் கூட அமெரிக்க நாடாளுமன்றம் இந்த முடிவுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும். மேலும் பொருளாதாரத் தடை மற்றும் சுற்றுலா தொடர்பாக விதிக்கப்பட்டுள்ள தடைகளையும் அமெரிக்கா நீக்க அமெரிக்க நாடாளுமன்றம் ஒப்புதல் அளிக்க வேண்டும். இருப்பினும் ஒபாமா இதையும் சாதிப்பார் என்று நம்பப்படுகிறது.
கியூபாவை ஒதுக்கி வைத்தது தவறான கொள்கை, தோல்வி அடைந்த கொள்கை என்பதை ஒபாமா ஒத்துக் கொண்டுள்ளார். அது உண்மைதான். காரணம், அமெரிக்காவின் அனைத்து சதிகள், தடைகளையும் தாண்டி கியூபா நன்றாகவே வளர்ந்திருக்கிறது. அமெரிக்காவின் தடையால் கியூபா துளி அளவு கூட பாதிக்கப்படவில்லை, சிதையவில்லை. மாறாக கம்பீரமாகவே நிமிர்ந்து நிற்கிறது.
இதையே வெள்ளை மாளிகையில் நேற்று பேசிய ஒபாமாவின் பேச்சும் வெளிப்படுத்தியது. "கியூபாவை தனிமைப்படுத்தியது பலன் தரவில்லை என்று வெளிப்படையாகவே ஒப்புக் கொண்டார் ஒபாமா.
இதுகுறித்து ஒபாமா கூறுகையில், கடந்த ஐம்பது ஆண்டுகளாக நாம் செய்து வந்ததைத் தொடர வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. அது பலன் தரவில்லை. எதிர்பார்த்த விளைவு ஏற்படவில்லை என்றார் ஒபாமா.
அமெரிக்கா நினைத்த எதையுமே இந்த தடையால், கியூபாவில் நிகழ்த்த முடியவில்லை. பிடல் காஸ்ட்ரோவை அசைத்துக் கூட பார்க்க முடியவில்லை அமெரிக்காவால். மேலும் கியூபாவை அமெரிக்கா மட்டுமே ஒதுக்கி வைத்திருந்தது. மற்ற நாடுகள் நட்புடன்தான் இருந்து வந்தன. இதனால்தான் அமெரிக்காவால், கியூபாவில் எதிர்பார்த்ததை செய்ய முடியாமல் போனது.
கியூபாவை ஒதுக்கி வைக்கும் கொள்கையை கைவிடுவதாக ஒபாமா அறிவிப்பதற்கு முன்பு கியூப அதிபர் ரால் காஸ்ட்ரோவுடன் ஒபாமா பேசினார். இந்தப் பேச்சுவார்த்தை ஒரு மணி நேரம் நடந்தது. அப்போது அடுத்தடுத்து என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர்.
இந்தப் பேச்சுவார்த்தையின்போது அமெரிக்க சிறையில் கடந்த 15 வருடமாக அடைக்கப்பட்டுள்ள 3 கியூப உளவாளிகளை விடுவிக்க அமெரிக்கா ஒத்துக் கொண்டது. அதேபோல கியூபாவில் அடைக்கப்பட்டுள்ள அமெரிக்கர் ஆலன் கிராஸை விடுவிக்க கியூபா ஒத்துக் கொண்டது.
இதுதவிர 1961ம் ஆண்டுடன் மூடப்பட்ட இரு நாட்டு தூதரகங்களையும் திறப்பது என்றும் ஒப்புக் கொள்ளப்பட்டது. மேலும், தீவிரவாதத்திற்கு ஆதரவு தரும் நாடுகளின் பட்டியலி்ல இடம் பெற்றுள்ள கியூபாவை அந்தப் பட்டியலிலிருந்து அமெரிக்க அரசு நீக்கவுள்ளது.
மேலும் இனிமேல் கியூபாவுக்கு அமெரிக்கர்கள் சட்டரீதியாக சுற்றுலா செல்லவும் அனுமதிக்கப்படுவர். இதுவரை அது தடை செய்யபட்டிருந்தது. அதேபோல மற்ற நாடுகளுடன் உள்ளதைப் போல கியூபாவுடனும் இனிமேல் அனைத்துத் துறைகளிலும் அமெரிக்கா நட்புறவுடன் பழக ஆரம்பிக்கும், உறவுகளை மேற்கொள்ளும்.
இரு நாடுகளுக்கும் இடையே பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் ஏற்படுத்தப்படும். கியூபாவுக்குத் தேவையான உதவிகளையும் அமெரிக்கா செய்யும். அமெரிக்க நிதி நிறுவனங்கள் இனி கியூபாவில் செயலபட முடியும். கியூபாவுக்குக் கடன் வழங்க முடியும். அமெரிக்க கிரெடிட் கார்டுகள் கியூபாவில் இனி செல்லுபடியாகும்.
எல்லாவற்றையும் விட முக்கியமாக உலகப் புகழ் பெற்ற கியூபா சிகார்களை இனிமேல் அமெரிக்காவுக்கு தாராளமாக கொண்டு வர முடியும்!.
அன்பால் மட்டுமே பிடல் காஸ்ட்ரோவை வெல்ல முடியும் என்பார்கள். அதை தற்போது அமெரிக்கா உணர்ந்து விட்டது என்பதே ஒபாமாவின் பேச்சு வெளிப்படுத்துகிறது.