ஈராக்கில் இருந்து நாடு திரும்பிய 300 ஐஎஸ் தீவிரவாதிகள்: பீதியில் இங்கிலாந்து
லண்டன்: ஈராக் மற்றும் சிரியாவில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேர்ந்து போரிட்ட இங்கிலாந்தைச் சேர்ந்த 320 போராளிகள் நாடு திரும்பியுள்ளனர்.
இங்கிலாந்தில் இருந்து சுமார் 700 பேர் ஈராக் மற்றும் சிரியாவுக்கு சென்று ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளுடன் சேர்ந்து போரிட்டு வருகின்றனர். அதில் 320 பேர் தற்போது நாடு திரும்பியுள்ளனர். அந்த 320 பேரும் அபாயகரமானவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் இங்கிலாந்தில் தாக்குதல் நடத்தலாம் அல்லது ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு ஆட்களை சேர்க்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
320 பேர் நாடு திரும்பிய செய்தியை இங்கிலாந்தைச் சேர்ந்த நாளிதழான தி டெலிகிராப் வெளியிட்டுள்ளது. ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் அவ்வப்போது பிணையக் கைதிகளின் தலையை துண்டித்து வீடியோ வெளியிட்டு வருகிறார்கள்.
அந்த தலை துண்டிப்பு வீடியோக்களில் முகமூடி அணிந்து ஆங்கிலம் பேசும் தீவிரவாதியான ஜிஹாதி ஜான் லண்டனைச் சேர்ந்த முகமது இம்வாசி(26) என்று அண்மையில் தெரிய வந்தது.
இங்கிலாந்தைச் சேர்ந்த மாணவிகள், வாலிபர்கள் ஈராக் மற்றும் சிரியா சென்று ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேர ஆர்வம் காட்டுவது போலீசாருக்கு பிரச்சனையாக உள்ளது. அண்மையில் 3 பள்ளி மாணவிகள் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேர பெற்றோருக்கு தெரியாமல் நாட்டை விட்டு வெளியேறிவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.