பாகிஸ்தானில் இருந்து வெளியேற இந்து, பிடிஐ நிருபர்களுக்கு திடீர் உத்தரவு
இந்திய, பாகிஸ்தான் நாடுகளுக்கிடையேயான ஒப்பந்தப்படி, இந்தியாவிலிருந்து 2 பத்திரிகையாளர்களை பாகிஸ்தானின் தலைநகரிலும், பாகிஸ்தானை சேர்ந்த இரு பத்திரிகையாளர்களை இந்திய தலைநகரிலும் தங்கியிருந்து செய்திகளை அளிக்க அனுமதி உள்ளது.
இரு பத்திரிகையாளர்களில் ஒருவர் செய்தி நிறுவனத்தை சேர்ந்தவராகவும் மற்றொருவர் தினசரி பத்திரிகை நிருபராகவும் இருக்க வேண்டும் என்பது விதிமுறை. அதன்படி பாகிஸ்தானுக்கான இந்திய பத்திரிகையாளர்களாக பிடிஐ செய்தி நிறுவனத்தை சேர்ந்த, சினேகேஷ் பிலிப் மற்றும் தி இந்து ஆங்கில பத்திரிகையின் சார்பில் மீனா மேனன் ஆகியோர் பணியாற்றி வந்தனர்.
கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் முதல் இஸ்லாமாபாத்தில் இருந்தபடி இவர்கள் செய்தி அளித்து வருகிறார்கள். இவ்விருவரின் விசா காலம் இம்மாதம் 9ம் தேதியுடன் முடிவடைந்தது. விசாவை நீட்டிக்க இரு பத்திரிகையாளர்களும் விண்ணப்பித்திருந்தனர்.
விண்ணப்பம் பரிசீலனையில் இருப்பதாக இதுவரை கூறிவந்த பாகிஸ்தான் அமைச்சகம், இப்போது, விசா காலத்தை நீட்டிக்க திடீரென மறுப்பு தெரிவித்துள்ளது. வரும் 20ம் தேதிக்குள் இரு பத்திரிகையாளர்களும் இந்தியாவுக்கு திரும்ப வேண்டும் என்று பாகிஸ்தான் வெளியுறவு மக்கள் தொடர்பு பிரிவு உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில் ஆட்சி மாற்றம், ஏற்பட உள்ளதாக எக்சிட் போல் கணிப்புகள் கூறிவரும் நிலையில் பாகிஸ்தான் இதுபோன்ற ஒரு அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது உலக நாடுகளை கவனிக்க செய்கிறது. இந்தியாவில் பணியாற்ற எந்த ஒரு பாகிஸ்தான் பத்திரிகையாளரும் முன்வராததால் 2011ம் ஆண்டு முதல் அந்த இடம் காலியாகவே இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.