பாகிஸ்தானில் சத்தமாக பாட்டு கேட்டதற்காக 16 வயது சிறுமியை சுட்டுக் கொன்ற மாமா
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் சத்தமாக பாட்டு கேட்டதற்காக 16 வயது சிறுமி அவரது மாமாவால் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் சக்வால் மாவட்டத்தில் உள்ள மதன் காலான் கிராமத்தைச் சேர்ந்தவர் ரிஹானா பீபி(16). அவர் கடந்த சனிக்கிழமை வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது அவர் சப்தமாக பாட்டுக் கேட்டுள்ளார். அந்த நேரம் வீட்டுக்கு வந்த அவரின் மாமா சப்தத்தை குறைக்குமாறு கூறியுள்ளார். ரிஹானா மறுக்க அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதனால் கடுப்பான மாமா துப்பாக்கியை எடுத்து ரிஹானாவின் தலையில் சுட்டார். இதில் ரிஹானா சம்பவ இடத்திலேயே பலியானார். இதையடுத்து அவரின் மாமா ஊரை விட்டே ஓடிவிட்டார்.
இந்த சம்பவம் பற்றி ரிஹானாவின் தந்தை போலீசில் புகார் அளித்தார். அவரது புகாரின்பெயரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் குற்றவாளியை தேடி வருகிறார்கள். விசாரணையில் குடும்ப பிரச்சனை எதுவும் இருந்ததாக தெரியவில்லை என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
பாகிஸ்தானில் சிறு சிறு காரணங்களுக்காக பெண்கள் கொலை செய்யப்படுவது சர்வசாதாரண விஷயமாகிவிட்டது. இது தவிர கௌரவ கொலை சம்பவங்களும் அதிகரித்துள்ளன.
கடந்த 2008ம் ஆண்டில் இருந்து இதுவரை 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாகிஸ்தான் பெண்கள் கௌரவ கொலை செய்யப்பட்டுள்ளனர் என்று அந்நாட்டு பெண்களின் வாழ்க்கை தரம் மேம்பட பாடுபடும் அவ்ரத் பவுன்டேஷன் என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications