விஷமாக மாறிய கள்ளச்சாராயம்... 24 பேர் பலி.. பாக். ஹோலி கொண்டாட்டத்தில் சோகம்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் ஹோலி கொண்டாட்டத்தின் போது கள்ளச்சாராயம் அருந்திய 24 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானில் ஹைதராபாத் நகர் அருகே உள்ள தாண்டோ முகமதுகான் பகுதியில் இந்துக்கள் அதிகளவில் வசித்து வருகின்றனர். நேற்று முன்தினம் இப்பகுதி மக்கள் ஹோலி பண்டிகையை சிறப்பாகக் கொண்டாடினர்.
அப்போது உள்ளூர் சாராய வியாபாரி ஒருவர் தயாரித்த கள்ளச்சாராயத்தை அப்பகுதி மக்கள் சிலர் வாங்கிக் குடித்துள்ளனர். பின்னர் சிறிது நேரத்திலேயே ஒருவர் பின் ஒருவராக மயங்கி கீழே விழுந்தனர். இதனால் அங்கு பெரும் பதற்றம் உருவானது.
உடனடியாக அவர்கள் உள்ளூர் மருத்துவமனைகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டனர். ஆனால், அவர்களில் 24 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்களில் 6 பேர் பெண்கள் என்றும், 3 பேர் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் பலரது நிலைமை இன்னும் கவலைக்கிடமாக இருப்பதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.