அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் புதிய ஷாஹீன் ஏவுகணையை பரிசோதித்த பாகிஸ்தான் !
இஸ்லாமாபாத்: அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் புதிய ஷாஹீன் ஏவுகணையை பாகிஸ்தான் இன்று பரிசோதனை செய்துள்ளது..
சீனாவின் உதவியுடன் பாகிஸ்தான் பல்வேறு ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. அண்மைக் காலமாக பாகிஸ்தான் மேற்கொண்டு வரும் ஏவுகணை சோதனையின் மூலம் அந்நாடு அணு ஆயுதம், ஏவுகணை தயாரிப்பு உள்ளிட்டவைகளில் தீவிரமாக கவனம் செலுத்தி வருவதாக தெரிகிறது. இதன் மூலம் அணு ஆயுதம் தொடர்பான சோதனையில் பாகிஸ்தானும் வேகமாக வளர்ந்து வருகிறது.
இந்நிலையில், இரண்டாயிரத்து 750 கி.மீ தொலைவு வரை சென்று இலக்கை தாக்கி அழிக்கும் ஆற்றல் கொண்ட, அணு ஆயுதங்களைத் தாங்கிக் செல்லும் புதிய ஷாஹீன் ஏவுகணை சோதனையை பாகிஸ்தான் இன்று நடத்தியுள்ளது.
இது தரையில் இருந்து புறப்பட்டு சென்று தரையில் உள்ள இலக்கை தாக்கும். இந்த ஏவுகணை அணுகுண்டு மற்றும் வழக்கமான வெடிகுண்டுகளை சுமந்து கொண்டு 2,750 கி.மீ. தொலைவுக்கு சென்று தாக்குதல் நடத்தும் ஆற்றல் கொண்டது. இன்று நடந்த ஏவுகணை சோதனை, அனைத்து அம்சங்களிலும் வெற்றி கண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த சோதனை எங்கு நடத்தப்பட்டது என்ற விவரத்தை தெரிவிக்க அந்நாடு மறுத்துள்ளது.
ஷாஹீன் ரக ஏவுகணைகளை தயாரித்து சோதனை செய்துவரும் பாகிஸ்தான் ஷாஹீன்-1, ஷாஹீன்-2 சோதனைகளை கடந்த ஆண்டு நடத்திய நிலையில் கடந்த 11-ம் தேதி ஷாஹீன்-3 ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக நடத்தியது. இந்த நிலையில், இன்றைய ஷாஹீன் 1-ஏ ஏவுகணை சோதனையை பாகிஸ்தான் நடத்தியுள்ளது.