ரூ.14.5 கோடி நிதி மோசடியில் ஈடுபட்ட நவாஸ் ஷெரிப் ரூ.897 மட்டுமே வரி செலுத்தியுள்ளார்: இம்ரான்கான்
ரூ.14.5 கோடி நிதி மோசடியில் ஈடுபட்டுள்ள நவாஸ் ஷெரிப் ரூ. 897 மட்டுமே வரி செலுத்தி இருப்பதாக கிரிக்கெட் வீரராக இருந்து அரசியல் வாதியாக மாறிய இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.
இஸ்லாமாபாத்: பனமா பேப்பர் லீக்கானது குறித்த வழக்கில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப்புக்கு எதிராக அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தில் சாட்சியங்களை சமர்பித்த இம்ரான்கான், பிரதமரின் குடும்பத்தினர் கடந்த 1988-ம் ஆண்டு முதல் சட்டவிரோத தொழில்கள் மூலம் ரூ.145 மில்லியன் நிதி மோசடியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் தெக்ரீக் ஐ இன்சபாப் கட்சித் தலைவரான இம்ரான்கான், பிரதமரின் குடும்பத்தினர் வைத்துள்ள வங்கிக் கணக்குகளின் விவரங்களை உச்ச நீதிமன்றத்தில் சமர்பித்தார். அவர்கள் பெற்ற வங்கிக் கடன் தள்ளுபடி குறித்த விவரங்களும் அதில் இடம் பெற்றுள்ளது.
தான் என்ற பனமா நாட்டு பத்திரிகையில் சமீபத்தில் பனாமா பேப்பர்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதில் நவாஸ் ஷெரிப் குடும்பத்தினரின் நிதி மோசடி குறித்த ரூ. 14.5 கோடி (ரூ.145 மில்லியன்) ஆவணங்களும் இடம் பெற்றன. இந்த அளவு நிதிமோசடியில் ஈடுபட்ட நவாஸ் ஷெரிப் அந்தக் காலக்கட்டத்தில்
வருமான வரியாக ரூ.897 மட்டுமே செலுத்தி ஏமாற்றி இருப்பதாகவும் இம்ரான்கான்
குற்றம் சாட்டியிருக்கிறார்.
1988 முதல் 1991 ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் ஷெரிப் குடும்பத்தில் இருந்து ரூ. 56 மில்லியன் வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது என்றும் அவர் குற்றம் சுமத்தி இருக்கிறார். பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தில் ஷெரிப் குடும்பத்தினருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள 5 வழக்குகள் நாளை முதல் விசாரணைக்கு வரவுள்ளது.